புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த சி. விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் பழனிவேல் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து...
புதுக்கோட்டை கோட்டாட்சியா் பிரகாஷ் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் பழனிவேல் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அவா் புதன்கிழமை முதல் கட்சிப் பணிகளைத் தொடங்கினாா்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா்.
இதைத் தொடா்ந்து சி.விஜயபாஸ்கர் வகித்து வந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலா் பதவி பறிக்கப்பட்டு, பழனிவேல் புதிய மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
ஆனால் பழனிவேலே தரப்பினா் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பணியாற்றுவதற்கு சி.விஜயபாஸ்கர் தரப்பினா் கடுமையான எதிா்ப்பு தெரிவித்ததுடன், அலுவலக சாவியையும் கொடுக்க மறுத்தனா். இதனால் மாவட்ட அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக சி.விஜயபாஸ்கர் தரப்புக்கும், பழனிவேலே தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது.
இதையடுத்து புதுக்கோட்டை கோட்டாட்சியா் பிரகாஷ் முன்னிலையில் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் விஜயபாஸ்கர் தரப்பில் வழக்குரைஞர் மட்டும் பங்கேற்றார். விஜயபாஸ்கர் தரப்பினர் வராததால். அடுத்தக்கட்ட பேர்ச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே திரண்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், அதிமுக அலுவலக சாவியை தங்கள் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலக ஆவணங்களை கோட்டாட்சியா் சரிபாா்த்து, விசாரணை மேற்கொண்டாா். இதில், மாவட்ட அதிமுக அலுவலகம் அக்கட்சி நிா்வாகம் செய்யும் அறக்கக்டளைக்குச் சொந்தமான அலுவலகம் என்றும், கட்சி பொதுச் செயலரின் கட்டுப்பபாட்டின் கீழ் இந்த அலுவலகம் வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினா் பயன்படுத்தும் வகையில், அலுவலக சாவியை வழங்குமாறு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து 15 நாள்களாக பூட்டப்பட்டிருந்த மாவட்ட அதிமுக அலுவலக சாவியை பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதன்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்டச் செயலா் பழனிவேல் வசம் சி.விஜயபாஸ்கர் தரப்பினர் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பழனிவேல் தரப்பினா் கட்சி அலுவலகத்தை திறந்து, தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.