திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது? - நாளை சிபிஎம் ஆலோசனை
திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது என்பது குறித்து மார்க்சிஸ்ட் (சிபிஎம்) நாளை(மார்ச் 23) மீண்டும் விவாதிக்க இருப்பது குறித்து...
5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள் குறித்து முடிவு செய்வதற்கு மீண்டும் நாளை(மார்ச் 23) சிபிஎம் மாநில செயற்குழு கூடி விவாதிக்கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யும் நடவடிக்கையில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது.
தற்போது கடந்த முறையைவிடக் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறும் எண்ணத்தில் இருந்து வரும் அந்த கட்சிக்கு, கடந்த தேர்தலைவிட ஓரிடத்தைக் குறைத்து 5 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த முறை ஒதுக்கிய 6 இடங்களையாவது ஒதுக்க வேண்டும் என சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால் திமுக-மார்க்சிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு இதுவரை உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வருகிறது.
எண்ணிக்கைக்காக கூட்டணியை விட்டு செல்லமாட்டோம்
இதனிடையே, கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, எண்ணிக்கைக்காக கூட்டணியை விட்டு செல்லமாட்டோம் என்று தெரிவித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலளார் பெ.சண்முகம், 5 இடங்களை ஏற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்பதா என்பது குறித்து நாளை(மார்ச் 23) கூடும் மாநில செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுப்போம் என அவர் கூறியுள்ளார்.
விசிக நாளை ஆலோசனை
இதேபோன்று திமுக கூட்டணியில் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கிடையே நாளை அவசர உயர்நிலை குழு கூட்டத்தை விசிக கூட்டியுள்ளது.
திமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இதுவரை போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை உறுதியாகவில்லை.
இதையடுத்து திருமாவளவன் தலைமையில் நாளை(மார்ச் 23) அவசர உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.