பெற்றோரை கைவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது! - சூலூரில் நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி
பெற்றோரை கைவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது என நடிகர் சிவக்குமார் உருக்கமாக பேசியது குறித்து...
பெற்றோரை கைவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது என உருக்கமாக பேசிய நடிகர் சிவக்குமார், "நானும் கோவையிலே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள லட்சுமி நாயக்கன்பாளையத்தில், வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் சுமார் 7000 சதுர அடியில் 14 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய முதியோர் காப்பகக் கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், கத்தரிக்கோலை கையில் எடுத்தபோது "இங்கு வயதில் மூத்தவர்தான் ரிப்பன் வெட்ட வேண்டும், நான்தான் இங்கு மூத்தவன் அதனால் நானே வெட்டுகிறேன்" என நகைச்சுவையாகப் பேசி ரிப்பனை வெட்டி கட்டடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அறைகளைப் பார்வையிட்ட அவர், "நானும் இங்கேயே வந்துவிடலாம் என நினைக்கிறேன், இங்குள்ள சாமியாரைப் போல இருக்கலாம் எனத் தோன்றுகிறது" எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.
இந்த விழாவிற்கு வள்ளலார் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீலஸ்ரீ மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் ஏ.ஆர். சுப்பிரமணியம் தலைமை வகிக்க, திருப்பூர் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் நீறணி பவளக்குன்றன் ஜோதிக் கொடியினை ஏற்றி வைத்தார். அறக்கட்டளை பொருளாளர் அருள்நிதி. ராம அவிநாசிலிங்கம் ஜோதி வழிபாட்டை நடத்தினார்.
நிகழ்வில் எம். அங்கம்மாள், ஏ.பி. முத்துசாமி, ஆர். சரஸ்வதி ரத்தினசாமி, ராம்ராஜ் காட்டன் நாகராஜன் மற்றும் சென்னை சில்க்ஸ் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய சிவகுமார், "பிள்ளைகள் தாய் தந்தையரை உயிருள்ளவரை நேசிக்க வேண்டும், அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் என் அம்மாவை இறக்கும் வரை ஒரு ராணி போல வைத்திருந்தேன். நான் கல்வி அறக்கட்டளை தொடங்கியபோது அதற்கான காசோலையை எம்.ஜி.ஆரிடம் என் அம்மாதான் கொண்டுபோய் கொடுத்தார்.
அதுபோன்று நீங்கள் எல்லோரும் பெற்றோரை கவனிக்காமல் விட்டால் அந்த பாவம் யாரையும் சும்மா விடாது. கடவுள் என்று யாரும் இல்லை, கடவுளுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது" என சிவகுமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.