காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...
காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சப்பரவாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் பஞ்சவர்ண மாலை தங்க வைர ஆபரணங்கள் சூடி எம்பெருமான் எழுந்தருளி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்தி வரதர் புகழ்பெற்ற தேவராஜ ஸ்வாமி என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாள்கள் நடைபெறும். அந்த வகையில் புதன்கிழமை சேனை மார் புறப்பாடு தொடங்கி, வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, கோயில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. கருடாழ்வாா் ஓவியம் பொறித்த கொடியானது கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்றத்தின் போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவா் வரதராஜ பெருமாள் கொடி மரம் அருகே எழுந்தருள வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பஞ்சவர்ண மாலைகள் தங்க வைர ஆபரணங்கள் சூடி சப்பர வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
கொடியேற்றம் முடிந்ததும் பெருமாள் தங்கச் சப்பரத்தில் வீதி உலா வந்தாா்.
கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
விழாவையொட்டி, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாளிக்க உள்ளாா்.
விழாவையொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.