நடிகர் அஜித்குமார் தாயார் மறைவு: தலைவர்கள் இரங்கல்
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் தாயார் மோகினி மறைவுக்கு தலைவர்கள் தெரிவித்துள்ள இரங்கல் குறித்து...
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி(84). இவர் சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அஜித் தாயாரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி(பாமக)
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.சி. சண்முகம்(புதிய நீதிக் கட்சி)
அன்புச் சகோதரர் அஜித் குமாரின் அன்புத் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தாயை இழக்கும் துயரம் ஈடு செய்ய முடியாதது; ஒரு மகனின் வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் ஊக்கசக்தி அன்னையின் ஆசிகளே.
வாழ்வின் சிகரங்களைத் தொட்ட உங்களைப் பார்த்து உங்கள் தாயார் பெருமைப்பட்ட தருணங்கள், உங்கள் இதயத்தில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். பிரிவின் துயர் பெரிது என்றாலும், அன்னையின் நற்பண்புகளும் அவர் உங்களுக்கு ஊட்டிய துணிச்சலுமே இந்த சோதனையான காலக்கட்டத்தில் உங்களை தாங்கிப் பிடிக்கும்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வரவும், தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.