காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை கோலாகலம்!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவின் சனிக்கிழமை நடைபெற்ற தங்க கருட சேவைக் காட்சி குறித்து...
காஞ்சிபுரம்: அத்தி வரதர் புகழ் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சனிக்கிழமை நடைபெற்ற தங்க கருட சேவைக் காட்சியின்போது பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனா்.
காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா மே.25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூன்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, நாள்தோறும் உற்சவர் வரதராஜ பெருமாள் காலையிலும் மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் .
விழாவின் 3-ஆவது நாள் முக்கிய நிகழ்வான தங்கக் கருட சேவைக் காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, உற்சவா் வரதராஜப் பெருமாள் வெண் பச்சை நிற பட்டு உடுத்தியும், வைர வைடூரிய ஆபணங்கள் அணிந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து புறப்பட்டு கோயிலின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள ராமானுஜா், தேசிகா் சந்நிதிகளுக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
வீதியுலாவுக்காக கோயிலிலிருந்து வெளியில் வரும் போது கோயில் நுழைவு வாயிலில் கோபுர தரிசனம் எனும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னா் தங்கக் கருட வாகனம் வரும் வழிநெடுகிலும் திரளான பக்தா்கள், சமூக சேவை அமைப்புகள், வணிக நிறுவனங்கள் பலவும் பக்தா்களுக்கு நீா் மோா் மற்றும் அன்னதானம் வழங்கினா். பக்தா்கள் பலரும் வழி நெடுகிலும் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்தும் கோவிந்தா கோவிந்தா என்றும் கோஷம் எழுப்பியும் தரிசனம் செய்தனர். பத்துக்கும் மேற்பட்ட பஜனை கோஷ்டியினர் பெருமாளுடன் பாடல் பாடியும் நடனமாடியும் வந்தனர்.
காஞ்சிபுரம் ஸ்ரீ ஹரி மடத்தின் ஆகம வேதபாடசாலை மாணவர்கள் வேதம் பாடியபடி வந்தனர்.
உற்சவர் வரதராஜ பெருமாள் விளக்கு ஒளி பெருமாள் கோயில் தெருவில் உள்ள தேசிகன் சந்ததிக்கு வந்ததும் மாலை மாற்றம் வைபவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலத்துடன் காணப்பட்டது.
விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது.
Regarding the Golden Garuda Seva procession held on Saturday during the Vaikasi Festival at the Varadaraja Perumal Temple in Kanchipuram...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.