முகப்பு
செய்திகள்

தாம்பத்தியத்தை விட வை- பை இணைப்பு தான் முக்கியம்: சர்வே ரிப்போர்ட்!

1700 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 40% பேர் தங்களது வாழ்வில் முதலில் முக்கியமானது வை - பை இணைப்பு தான் என்று கூறுகின்றனர். 37 % நபர்கள் தங்களது வாழ்வில் செக்ஸ் அல்லது தாம்பத்தியத்துக்கு ...

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:45 PM
பகிர்:

சர்வ தேச அளவில் மொபைல் இணைப்புகள் வழங்குவதில் முன்ணணி நிறுவனமான ஐ பாஸ் சமீபத்தில் வை - பை குறித்த ஆய்வொன்றை நடத்தியது. அதில் பதில் அளித்த மக்களில் பெரும்பாலானோர் தங்களது வாழ்வில் முதலிடம் வகிக்கும் தவிர்க்க முடியாத அம்சம் எதுவென்ற கேள்விக்கு ‘வை-பை’ என்று பதில் அளித்திருக்கிறார்கள். சுமார் 1700 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 40% பேர் தங்களது வாழ்வில் முதலில் முக்கியமானது வை - பை இணைப்பு தான் என்று கூறுகின்றனர். 37 % நபர்கள் தங்களது வாழ்வில் செக்ஸ் அல்லது தாம்பத்தியத்துக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறி இருக்கிறார்கள். 14 % பேர் சாக்லேட்டுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறி இருக்கிறார்கள்., வெறும் 9 % பேர் தான் ஆல்கஹாலுக்கு முதலிடம் தருவதாகக் கூறி இருக்கிறார்கள். 

மக்கள் ஏன் இப்படி வை - பை க்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?

துரிதமான சேவை, குறைந்த விலை, சிறப்பான பயன்பாடு இவற்றையெல்லாம் வாரித் தருவதால் தான் மக்கள் தங்கள் வாழ்வில் மற்றெல்லாவற்றையும் விட  வை- வை இணைப்புகளுக்கு மிக, மிக முக்கியமான இடத்தைத் தருகிறார்கள் என்று ஐ பாஸின் விற்பனை வணிக அதிகாரி பெட்ரீஸியா ஹியூம் தெரிவிக்கிறார்.
75 சதவிகித மக்கள் வை - பை பயன்படுத்த ஆரம்பித்த பின் தங்களது வாழ்வின் தரம் பல விதத்தில் உயர்ந்திருப்பதாக உணர்கிறார்களாம். மக்களின் இந்தப் பொதுக் கண்ணோட்டத்தை முன் வைத்தே பல நாடுகளும் பொது மக்கள் கூடும் இடங்களான விமான நிலையம், மருத்துவமனைகள் மற்றும் தங்கும் விடுதிகள் முதலிய இடங்களில் இலவச வை- பை வசதியை அறிமுகம் செய்திருக்கின்றன. என்கிறார் பெட்ரீஸியா. 

பொதுவாக ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து வேலை செய்யும் வாய்ப்புகளற்ற மார்கெட்டிங் துறை அலுவலர்கள், அதிகாரிகள், விற்பனைப் பிரதிநிதிகள், வேலை நிமித்தம் தொடர்ந்த பயணங்களில் சிக்கிக் கொள்ளும் விற்பனை மேலாளர்கள் உள்ளிட்டோர், தொடர்ச்சியான பயணங்களில் இருக்கும் விளையாட்டு வீர்ர்கள் போன்றோர் வை- பை வசதி இல்லா விட்டால் தங்களது வாழ்வில் எதையோ இழந்தார் போல் ஆகி விடுகிறார்கள். இவர்களால் ஒவ்வொரு அலுவலையும் நேரில் சென்றும் காண முடியாது. எல்லாவற்றையும் இணைய வாயிலாக எளிதாகச் செய்து பழகி விட்டவர்கள். இவர்கள் மட்டுமில்லை கணினி மயமாகி விட்ட இவ்வுலகில் கூடிய விரைவில் அனைத்து துறை அலுவலர்களுமே வை - பை இல்லாமல் அசவுகரியப் படும் நாள் வந்து விட்டது. பள்ளிகள், கல்லூரிகள், மடங்கள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என அனைத்து இடங்களிலுமே இலவச வை- பை வசதி வரக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை. இதோ நெருங்கி விட்டது. ஏனெனில் மக்கள் தங்களது இணையப் பயன்பாட்டை அதிகரிக்க அதிகரிக்க வை- பைக்களின் முக்கியத்துவம் பெருகத் தான் செய்யும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.