முகப்பு
செய்திகள்

இறந்து விட்டார் என நினைத்த பிரிட்டிஷ் பெண், 6 மணி நேரத்துக்குப் பின் உயிர் மீண்ட அதிசயம்!

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எடுயர்டு அர்குடோ கூறுகையில், மிக மோசமான ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்டு ஆர்ட்ரேவின் இதயம் இயங்க மறுத்தது. அவர் செத்துப் பிழைத்திருக்கிறார். என்கிறார்.

Updated On : 7 டிசம்பர் 2019, 3:36 pm IST
miraculous british woman
பகிர்:

ஆர்ட்ரே மாஷ் எனும் 34 வயதுப் பெண் வார இறுதி விடுமுறையைக் கழிக்கத் தன் கணவருடன் வடக்கு ஸ்பெயினில் உள்ள பைரினீஸ் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கையில் கடும் பனிப்புயலில் சிக்கிக் கொண்டார். இதனால் நவம்பர் 3 ஆம் தேதி  பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஆறுமணி நேரத்திற்கும் மேலாக இதயம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.  மீட்புக்குழுவினர் அவரைச் சென்று அடையும் போது மணி பிற்பகல் 3.40. அப்போது அவர் உயிருடன் இருப்பதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை என்கிறார்கள். அங்கிருந்து உடனடியாக ஆர்ட்ரேவை மீட்டு வால் டி ஹெப்ரன் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்கையில் நேரம் மாலை 5.44 ஐத் தாண்டி இருந்தது. அங்கு, மருத்துவர்கள் ஆர்ட்ரேவின் ரத்தத்தை சூடேற்றும் முயற்சியைத் தொடங்கினர். பனிப்புயலில் சிக்கியதால் உடலில் ரத்தம் உறைந்து இதயம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. இனி, ஆர்ட்ரே பிழைப்பதற்கு வழி இல்லை என்று அவரது கணவர் வருந்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென 9.46 மணியளவில் அவரது இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கிய அதிசயம் நிகழ்ந்தது. இதைக் கண்டு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எடுயர்டு அர்குடோ கூறுகையில், மிக மோசமான ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்டு ஆர்ட்ரேவின் இதயம் இயங்க மறுத்தது. தொழில்நுட்ப ரீதியாகச் சொல்வதென்றால் அவர் செத்துப் பிழைத்திருக்கிறார்’ - என்கிறார்.
 
‘ஹைப்போதெர்மியா’ என்பது ஒரு மருத்துவ அவசரநிலை ஆகும், இது மனித உடல், வெப்பத்தை உற்பத்தி செய்வதைக் காட்டிலும்  வேகமாக வெப்பத்தை இழக்கும்போது ஏற்படுகிறது, இதனால் அச்சமூட்டும் விதத்தில் ஆபத்தான குறைந்த உடல் வெப்பநிலை ஏற்படும். மனிதர்களுக்கு சாதாரண உடல் வெப்பநிலை சுமார் 98.6 F (37 C). மனித  உடல் வெப்பநிலையானது 95 F (35 C) க்கும் குறைவாகச் செல்லும் போது ஹைப்போதெர்மியா ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மிகப்பெரிய ஆபத்திலிருந்து மீண்ட நிலையில், அதைப் பற்றி உடனிருந்தவர்கள் வாயிலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு தனக்கு ஏற்படவிருந்த அபாயம் குறித்துப் பேசும் போது ஆர்ட்ரே மிகுந்த ஆச்சர்யம் அடைகிறார். பனிப்புயலில் சிக்கிய அந்த நிமிடங்களைப் பற்றிய நினைவுகள் எதுவும் அவரிடம் இல்லை. அந்த வார இறுதியைப் பற்றிய எந்த ஞாபகங்களும் தற்போது என்னிடமில்லை என்கிறார் ஆர்ட்ரே. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.