முகப்பு
செய்திகள்

இதைச் செய்ய சரியான நேரம் வந்துவிட்டதா?

கரோனா.. இந்த ஒற்றை வார்த்தை உலகம் முழுவதையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

Updated On : 1 ஏப்ரல் 2022, 4:26 pm IST
மார்ச் 31ஆம் தேதிக்குள் கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.
பகிர்:


கரோனா.. இந்த ஒற்றை வார்த்தை உலகம் முழுவதையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

பொது முடக்கம், சமூக இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என நாம் இதுவரை பயன்படுத்தாத வார்த்தைகளையும் புதிய வாழ்முறையையும் கற்றுக் கொடுத்தது. 

தற்போது கரோனா மற்றும் பொது முடக்கத்திலிருந்து விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மக்கள் எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள், வாங்கிய அடி பலம் என்பதால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. ஆனால் விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்ற வார்த்தைக்கு இணங்க, ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு தனி நபரும், கரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்துக்குச் செல்ல தங்களது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, மார்ச் 31ஆம் தேதிக்குள் கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முகக்கவசம் அணியுமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், தில்லியிலும், மகாராஷ்டிரத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோல பல மாநிலங்கள் அடுத்தடுத்த நாள்களில் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், முகக்கவசம் போன்ற மிகவும் அடிப்படையான விஷயங்களில் தளர்வுகளை அறிவிப்பதற்கு இது உகந்த நேரமல்ல என்றும், முன்கூட்டியே இந்த அறிவிப்புகள் வெளியாவதால், எதிர்வினையாற்றும் அபாயம் அதிகரிப்பதாகவும் சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

முதல் அலையின்போது வயதானவர்கள் தான் அதிகம் பலியாகினர். ஆனால், இரண்டாம் அலையின்போது ஏராளமான இளைஞர்கள் கரோனாவுக்கு பலியாகினர். தற்போது பெரும்பாலானோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும், கரோனா தொற்று ஏற்படாமல் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு இல்லை. கூட்டமான இடங்களில், வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயமில்லை என்பதை இவ்வளவு அவசரமாக அறிவிக்க வேண்டியதில்லை.

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தடுப்பூசி நம்மைக் காக்கும் என்றாலும், ஒருவேளை கரோனா தொற்று ஏற்பட்டு உயிராபத்து ஏற்படாவிட்டாலும், அந்த தொற்றின் தாக்கம் வெகு நாள்களுக்கு நமது உடல்நலனை பாதிக்கும்.

நோயை குணப்படுத்துவதை விட, நோய் வராமல் தற்காத்துக் கொள்வதே சிறந்தது. எனவே, முகக்கவசம் கட்டாயமில்லை என்றாலும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது சிறந்தது. 

எனவே, முகக்கவசத்தை விட்டொழிக்க இது மிகச்சரியான நேரமல்ல என்பதே பெரும்பாலான சுகாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அதுபோல, அனைவரும் முககவசம் அணியாவிட்டாலும் இணை நோய் உள்ளவர்கள், ஏற்கனவே உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போதும், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருக்கும் போதும் தங்களை தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணியலாம். 

இதுவரை அரசு கட்டாயப்படுத்தி நம்மைக் காத்து வந்தது. இது நம்மை நாமே சமூக பொறுப்புடன் காத்துக் கொள்ளும் தருணம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிறார்கள் மருத்துவத் துறையில் இருப்போர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments