முகப்பு
செய்திகள்

காற்று மாசினால் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

காற்று மாசுபாட்டினால் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
கோப்புப்படம்
பகிர்:

காற்று மாசுபாட்டினால் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

நாட்டில் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குறிப்பாக நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதிக காற்று மாசு உள்ள இடங்களில் வாழ்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று பல ஆய்வுகள் கூறியிருக்கின்றன. 

ஆனால், காற்று மாசினால் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என அமெரிக்காவின் மிக உயர்ந்த மருத்துவ ஆய்வு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் 2 பெரிய நகரங்கள் மற்றும் 6 மாகாணங்களில் உள்ள ஆண்கள், பெண்கள் என 5 லட்சம் பேரிடம்  கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காற்று மாசு அளவு பி.எம். 2.5 உள்ள இடங்களில் 10-15 ஆண்டுகளில் இருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. 

ஆய்வு நடைபெற்ற கடந்த 20 ஆண்டுகளில் 15,870 பேருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. பி.எம்.2.5-க்கு மேல் உள்ள இடங்களில் வாழ்பவர்களுக்கு குறிப்பாக ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது காற்று மாசு அதிகமுள்ள பகுதியில் மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. 

மோட்டார் வாகனங்களின் பயன்பாடு, விவசாயக் கழிவுகள், மரக்கட்டைகள் ஆகிய பொருள்களை எரித்தல், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவைகள் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. 

தேசிய புற்றுநோய் நிறுவன இதழில்(National Cancer Institute) இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.