உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?
உலகம் முழுவதும் உடல் எடைக் குறைப்பு ஊசிகளால் நேரிட்ட மரணங்கள் குறித்து..
அண்மைக் காலமாக உலகின் வளர்ந்த நாடுகளில் அதிக பிரபலமடைந்திருக்கும் ஒஸெம்பிக், மௌன்ஜரோ, வேகோவி போன்ற உடல் எடைக் குறைப்பு ஊசிகளால், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த ஊசிக்கு பலியானவர்களில் 20 வயது இளம்தலைமுறை அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
தேசிய உடல் பருமன் கழகம் இது பற்றி விளக்கம் கொடுத்திருப்பதாவது, உண்மையில் உடல் பருமானால் அவதிப்படுவோருக்கு இந்த மருந்து பயனுள்ளதாகவே உள்ளது, ஆனால், இளம் வயதில், மெலிந்த தோற்றம் வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல், இந்த ஊசியைப் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது.
Advertisement
Advertisement
ஒருவருக்கு அது தேவையில்லாத போது, அதை அவர் பயன்படுத்துகிறார் என்றால், அந்த ஊசிக்கான விதிமுறையை அவர் மீறுகிறார் என்றுதான் அர்த்தம். எனவே, அந்த ஊசியை செலுத்திக் கொண்டால், அதனால் ஏற்படும் அபாயங்களை அவர்கள்தான் சந்திக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், இந்தக் கூற்றுகளை நிரூபிக்கும் தரவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
சிலர், தங்களுக்கு எதுவும் நடக்காது என்று நினைத்து இந்த ஊசிகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.
பிரிட்டனில், ஜிஎல்பி-1 ஊசிகளை செலுத்திக் கொண்ட 173 பேர் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. உடல் பருமனுக்கு எதிரானப் போரில் மிகப்பெரிய கருவியாகக் கருதப்பட்ட இந்த ஊசிகளே தற்போது உயிர்க்கொல்லிகளாக மாறியிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதலில், இந்த ஊசிகளின் பக்கவிளைவுகளாக தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவைதான் இருந்தன. ஆனால், சிலருக்கு இது மரணத்தை விளைவிக்கும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஜிஎல்பி 1 மருந்து எடுத்துக் கொண்ட சிலருக்கு மண்ணீரலில் கல், சிறுநீரகக் கல், கணையத்தில் அழற்சி போன்றவையும் பக்கவிளைவுகளாக ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
முதலில், உடல் உறுப்புகள் செயலிழந்து பிறகு படிப்படியாக மரணத்தை தழுவுகிறார்களாம். 2024ஆம் ஆண்டு ஊசி செலுத்திக் கொண்டு உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழில், பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறப்பு நேரிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்து.
மேலும், உடல் உள்ளுறுப்புகளில் சீழ்பிடித்தல், கணைய பாதிப்பு போன்றவையும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கையில், ஒன்று மருந்தின் லேபிளில் பக்க விளைவுகளை பட்டியலிடுங்கள் அல்லது சந்தையிலிருந்து திரும்பப்பெறுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
About deaths caused by weight loss injections around the world..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.