வயதானாலும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த 6 விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்!
இளமையைத் தக்கவைக்க செய்ய வேண்டியவை பற்றி...
வயதானாலும் இளமையுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்போது இயல்பாக சருமம் சுருக்கம் ஏற்படும். இதனால் வயதான தோற்றமும் வயதும் வெளியே தெரிகிறது. ஆனால், வயதானால் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் அது மிகவும் குறைவான தாக்கம்தான். அதாவது நாம் சில விஷயங்களைக் கடைப்பிடிக்கும்போது வயதானாலும் இளமையுடன் தோற்றமளிக்கலாம்.
சரும அழகு, வயதான தோற்றம் அனைத்துமே நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றையே சார்ந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
Advertisement
சன்ஸ்க்ரீன்
வயது குறைவாக இருந்தாலும் சிலருக்கு சருமம் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு காரணம் அவர்கள் சருமத்தில் கவனம் செலுத்தாததுதான். அதிலும் குறிப்பாக வெளியில் செல்லும்போதும் சரி, வெய்யிலில் செல்லும்போதும் சரி முகத்திற்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியால் ஏற்படும் புற ஊதாக் கதிர்வீச்சுதான் முதுமைக்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது. இவை ஆழமான செல் சேதத்திற்கும் சுருக்கங்களுக்கும் காரணமாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் எப்படியாக இருந்தாலும் குறைந்தபட்சம் எஸ்பிஎஃப் கொண்ட க்ரீம்களையாவது பயன்படுத்துங்கள்.
சர்க்கரை வேண்டாம்!
பகல் நேரங்களில் சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரைகள் நிறைந்த உணவுகள், உடலுக்குள் உள்ள புரதங்கள், கொழுப்புகளுடன் ஒட்டிக்கொண்டு சருமத்தில் தொய்வு, கோடுகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. காய்கறிகள், முழு தானியங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடுவதால் அவை சரும சேதத்தை எதிர்த்துப் போராடுவதோடு புத்துணர்ச்சியையும் தருகின்றன.
தூக்கம்
உடல், மன ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமப் பொலிவிற்கும் தூக்கம் அவசியம். தூக்கம் சரியாக இல்லாதபோது அல்லது குறைவாக இருக்கும்போது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கருவளையங்கள், வெளிறிய சருமம் உண்டாகிறது. மாறாக ஆழ்ந்த தூக்கம் இருக்கும்போது உடல் தன்னைச் சரிசெய்கிறது. சுற்றுச்சூழல் நச்சுகளை வெளியேற்றி இறந்த செல்களைப் புதுப்பிக்கிறது.
அதேபோல நீங்கள் தூங்கும் விதமும் முக்கியமானது. குப்புறப் படுத்து முகத்தை தலையணையில் அழுத்தி தூங்கக் கூடாது. இதுவும் நாடாளடைவில் சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம், முடிந்தவரை மல்லாந்து படுப்பது நல்லது. தலையணையைச் சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்யுங்கள்.
சருமத்திற்கு அழுத்தம் வேண்டாம்!
சருமம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறோம். சருமத்தை சோப்பு, க்ரீம் கொண்டு அதிகமாக தேய்ப்பது, சூடான நீரைப் பயன்படுத்துவது, ரசாயன தயாரிப்புகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது சருமத்தில் வறட்சியும் அழற்சியும் ஏற்படுத்தும். எனவே, வெதுவெதுப்பான நீரையும் மென்மையான தயாரிப்புகளையும் சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
மன அழுத்தம்
மன அழுத்தமும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். மன அழுத்தத்தில் இருக்கும்போது, மூளை, உடலில் கார்டிசோலை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. அதிக கார்டிசோல் அளவு, சருமப் பொலிவிற்குக் காரணமான கொலாஜன் உற்பத்தியைத் தடுக்கிறது. இதனால் சருமத்தில் சுருக்கம், பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.
திரைப் பயன்பாடு
டிவி, ஸ்மார்ட்ஃபோன், கணினி பயன்பாடு தற்போது அதிகரித்துள்ள சூழலில் இவற்றாலும் சரும பாதிப்பு ஏற்படுமா? என்றால் உண்மைதான்.
ஸ்மார்ட்போன், மடிக்கணினியிலிருந்து வெளிப்படும் நீல ஒளி உங்கள் சருமத்தில் ஊடுருவி, கொலாஜனைச் சிதைத்து பாதிப்பை ஏற்படுதிகிறது. சூரிய ஒளி அளவுக்கு பாதிப்பு இல்லையென்றாலும் சருமத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. திரையைப் பார்க்கும்போது கண்களைச் சுருக்கினால் அது சரும சுருக்கங்களை ஏற்படுத்தும்.
அதனால் கண்களுக்கு ஓய்வு கொடுக்க, திரைகளிலிருந்து அவ்வப்போது இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீல ஒளியைத் தடுக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.