வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியது பற்றி...
சிறப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் மன்னிக்கும் குணம் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும்போது தன்னைச் சுற்றியிருப்பவர்களால் மனக்கசப்புகள் ஏற்படலாம். அவர்களது தவறால் நீங்கள் அதிகம் காயம்பட்டிருக்கலாம். அதனால் அவர்களை எளிதாக மன்னிக்க முடியாது என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், ஒருவர் மீதான மனக்கசப்பை அப்படியே மனதில் வைத்திருப்பது ஒருபோதும் மகிழ்ச்சியானதல்ல. அது உண்மையில் உங்களின் மன நிலையை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும். இதனால் உடல் ஆரோக்கியத்திலும் நீங்கள் பாதிக்கப்படலாம்.
Advertisement
சில விஷயங்களை எளிதாக விட்டுவிட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடியும்.
சுமார் 23 நாடுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுதான் இது. 'என்பிஜே மென்டல் ஹெல்த்'(மனநலம்) என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இயல்பான மன்னிக்கும் குணம் இருந்தால் சிறந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
மேலும் இதில் கூறப்பட்டுள்ளதாவது:
மன்னிக்க வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் எல்லாவற்றையும் நீங்கள் விட்டுவிட வேண்டும் என்று அவசியமல்ல. ஆனால், உங்கள் ஆரோக்கியத்திற்காக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு இருக்கும் மனக்கசப்பைத் தூக்கி எறிய வேண்டும். உங்களை, உங்களின் மன நிலையை அதிகம் தொந்தரவு செய்யக்கூடிய நபரை நீங்கள் மன்னிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொந்தரவு செய்யக்கூடிய விஷயங்களைத் தவிர்க்க இதனைச் செய்ய வேண்டும்.
இதன் மூலமாக மனதில் இருந்த அழுத்தங்கள் விலகி தெளிவும் நிம்மதியும் கிடைக்கும். உங்களுடைய மனக்கசப்புக்குக் காரணமான நபரை மன்னித்த அடுத்த ஓராண்டுக்குள் உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் காண முடியும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதற்காக, ஆய்வில் பங்கேற்றவர்களிடம், தங்களைக் காயப்படுத்தியவர்களை எவ்வளவு மன்னிக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது. காலத்திற்கேற்பவும் ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் ஒவ்வொருவரின் இயல்பான குணத்திற்கு ஏற்பவும் இது மாறியது. இதன் மூலமாக ஆய்வாளர்கள் ஒரு முடிவுக்கு வந்ததுள்ளனர்.
அப்போது மன்னிக்கும் குணம், சிறந்த உளவியல், சமூக நல்வாழ்வுடன் தொடர்புடையதாக இருந்தது. அதிக மன்னிக்கும் குணம் கொண்டவர்கள், அதிக அளவிலான நேர்மறை மனப்பான்மையையும் தங்கள் வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய சிறந்த புரிதலையும் கொண்டுள்ளனர். குறிப்பாக தன்னைச் சுற்றியுள்ள உறவுகளில் அதிக திருப்தி உடையவர்களாக இருக்கின்றனர்.
ஒருவரை உங்களால் இப்போது மன்னிக்க முடியாவிட்டால் காலப்போக்கில் மன்னிக்க முயற்சி செய்ய வேண்டும் என ஆய்வின் முதன்மை ஆசிரியரும் உளவியலாளரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் ரிச்சர்ட் கௌடன் பரிந்துரைக்கிறார்.
மன்னிப்பு என்பது சவாலானது என்றாலும் உறவுகளில் அதனைச் செயல்படுத்தும்போது அந்த உறவுகள் தொடரவும் வாய்ப்புள்ளது.
மனக்கசப்புகளை மனதில் வைத்திருப்பது உடல் மற்றும் மன நலம் இரண்டுக்குமே தீங்கானது. மனக்கசப்புகளை மனதில் வைத்திருக்கும் நபர்கள் அதிக கோபத்தையும் மன அழுத்தத்தையும் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய எதிர்மறையான கண்ணோட்டத்தை கொண்டிருப்பார்கள். இதுவே அதிகரிக்கும்போது கவலை, உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தங்களைக் காயப்படுத்திவரை மன்னிக்கும்போது அவர்கள் தங்களை இலகுவாக உணர முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.