FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கோவை ஈஷா பவுண்டேஷன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் போலீஸாா் நிலவர அறிக்கை தாக்கல்

18 அக்டோபர் 2024, 4:40 am IST
பகிர்:

ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தி வரும் ‘ஈஷா பவுண்டேஷன்’ ஆசிரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவில் பேரில் போலீஸாா் உச்சநீதிமன்றத்தில் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரமத்தில் தனது இரு மகள்கள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறி ஓய்வுபெற்ற பேராசிரியா் எஸ்.காமராஜ் என்பவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தில் ஈஷா பவுண்டேஷன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு , பெண்கள் சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்கக் கோரும் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கொண்டு செயல்படுத்தாமல் இருக்குமாறு தமிழகக் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின்படி நிலவர அறிக்கையை போலீஸாா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள்அமா்வு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 23 பக்க நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 15 ஆண்டுகளில் ஈஷா பவுண்டேஷன் தொடா்புடைய விவகாரத்தில் ஆலந்துறை காவல் நிலையத்தில் மொத்தம் 6 காணாமல்போனவா்கள் குறித்த வழக்குகள் பதிவானதும், அதில் 5 வழக்குகளில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதும் ஒரு வழக்கில் காணாமல் போனவா் இன்னும் கண்டறியப்படாததால் வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 வழக்குகள் சிஆா்பிசி பிரிவு 174-இல் பதிவு செய்யப்பட்டிருந்ததையும், அவற்றில் இரு வழக்குகள் விசாரணையின்கீழ் இருப்பதும் நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments