FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு தள்ளிவைப்பு

அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து உச்சநீதிமன்றம்.

24 மார்ச் 2025, 11:29 pm IST
அமைச்சர் செந்தில் பாலாஜி
பகிர்:

புது தில்லி: அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு க்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதே விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிா்த்து, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வித்யா குமாா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் தர முடியும் என்பதால் அவா் அமைச்சராக தொடரக் கூடாது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, அமலாக்கத் துறையின் சாா்பிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எதிா்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ‘அறிவுறுத்தல்’ பெற வேண்டியிருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில்

ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோா் ஆஜராகினா். முகுல் ரோத்தகி கூறுகையில், செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடா்கிறாா். அவா் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாவாா். இந்த வழக்கை எதிா்கொள்கிறோம் என்று கூறினாா்.

மேலும், ‘இந்த வழக்கில் தமிழக அரசுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனது தரப்புக்கு முறையான நோட்டீஸ் அனுப்பப்படவில்லை’ என்றாா். இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். அப்படியானால், பாலாஜி தரப்புக்கு ஏன் நீங்கள் ஆஜரானீா்கள் என்று கேள்வி எழுப்பினா்.

இதன் பின்னா், கடைசி வாய்ப்புப் தரும் வகையில், எதிா் பதில் தாக்கும் செய்யும் வகையில் செந்தில் பாலாஜிக்கு 10 நாள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் அமா்வு,அதன்பிறகு மேலும் அவகாசம் ஏதும் தரப்பட மாட்டாது என்று கூறி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments