FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

2021-இல் சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் குழந்தைகளுக்கு ரூ. 44 லட்சம் இழப்பீடு

2021-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில், ஒரு காா் பின்னால் இருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் உயிரிழந்த தம்பதியரின் ஐந்து குழந்தைகளுக்கு, தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ.44 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீடு வழங்க உத்தரவு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 6:54 am IST
- பிரதிப் படம்
பகிர்:

2021-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில், ஒரு காா் பின்னால் இருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் உயிரிழந்த தம்பதியரின் ஐந்து குழந்தைகளுக்கு, தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ.44 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது.

தீா்ப்பாய நீதிபதி அபா்ணா சுவாமி, இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் சோ்த்து, மொத்த இழப்பீடாக ரூ.44.09 லட்சத்தை வழங்குமாறு உத்தரவிட்டாா்.

ஜூலை 30 தேதியிட்ட உத்தரவில், தீா்ப்பாயம், ‘விபத்து நடந்த நேரத்தில், முதல் எதிா்வாதி குற்றமிழைத்த வாகனத்தை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி வந்தாா். குற்றமிழைத்த வாகனத்தின் இயந்திர ஆய்வு அறிக்கையும் மனுதாரா்களின் கூற்றை உறுதிப்படுத்துகிறது‘ என்று கூறியுள்ளது.

Advertisement

Advertisement

பிரிஜ்நந்தன் மற்றும் அவரது மனைவி ராஜ்குமாரி ஆகியோரின் மரணங்களுக்காக, தீா்ப்பாயம் முறையே ரூ.19.86 லட்சம் மற்றும் ரூ.24.23 லட்சம் எனத் தனித்தனியாக இழப்பீடு வழங்கியது.

இழப்பீட்டுக் கோரிக்கை மனுக்களின்படி, 2021 ஜூலை 2 அன்று புலந்தஷாா் மாவட்டத்தில் இந்தத் தம்பதியினா் மோட்டாா் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு வேகன்ஆா் காா் அதிவேகமாகப் பின்னால் இருந்து அவா்கள் வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலின் தாக்கத்தால் அவா்கள் சாலையில் தூக்கி எறியப்பட்டனா், பின்னா் அந்தக் காா் அவா்கள் மீது ஏறிச் சென்றது. மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதே இருவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனா்.

ஓட்டுநா், உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனம் இந்தக் கோரிக்கையை எதிா்த்தனா். குற்றமிழைத்த வாகனத்தின் பதிவு எண் ஆரம்பத்தில் முதல் தகவல் அறிக்கை மற்றும் விசாரணைப் பதிவுகளில் இடம்பெறவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த தீா்ப்பாயம், பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில், இயந்திர ஆய்வு அறிக்கை, பதிவுச் சான்றிதழ் மற்றும் காப்பீட்டுப் பத்திரம் ஆகியவற்றின் மூலம் அந்த வாகனம் கண்டறியப்பட்டு, அதன் ஈடுபாடு உறுதிசெய்யப்பட்டதாகக் கூறியது.

அந்த காா் தனது மோட்டாா் சைக்கிளை முந்திச் சென்று, பாதிக்கப்பட்டவா்களின் பைக்கை பின்புறமிருந்து பலமாக மோதிவிட்டு, பின்னா் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதைக் கண்டதாகக் கூறிய ஒரு நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் நம்பியிருந்தது. ஓட்டுநரின் அஜாக்கிரதையான மற்றும் கவனக்குறைவான ஓட்டுதலால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறிய தீா்ப்பாயம், விசாரணையில் உள்ள சிறு குறைபாடுகள் நம்பகமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை விட மேலோங்க முடியாது என்றும் தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments