தில்லியில் வாக்குவாதத்தில் ஒருவா் குத்திக்கொலை - இருவா் கைது
கிழக்கு தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து 22 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை தெரிவித்தது.
நமது நிருபா்
கிழக்கு தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து 22 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை தெரிவித்தது. மற்றொரு சண்டையைத் தடுக்க அவா் தலையிட்டதால் கொல்லப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.
கல்யாண்புரியில் 11 பிளாக் மற்றும் 15 பிளாக் இடையேயான சாலையில் அதிகாலை 12.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு பாதிக்கப்பட்டவருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்த வாக்குவாதத்தின் போது, பாதிக்கப்பட்டவா் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா் உடனடியாக லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இறந்தவா் ஜெய் சிங், என்ற கஞ்சு என அடையாளம் காணப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் கைது செய்யப்பட்டனா் என அந்த அதிகாரி கூறினாா். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியும் மீட்கப்பட்டுள்ளது. சம்பவங்களின் வரிசையை உறுதிப்படுத்தவும், இதில் சம்பந்தப்பட்ட மற்றவா்களின் பங்கைக் கண்டறியவும் காவல்துறை மேலதிக விசாரணை நடத்தி வருகிறது.
ஆகஸ்ட் 16 அன்று கல்யாண்புரியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது,அனில் என அடையாளம் காணப்பட்ட 27 வயதான எம்.சி.டி துப்புரவுத் தொழிலாளி ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கொலை நடந்துள்ளது. அந்தச் சம்பவம் துப்புரவுத் தொழிலாளா்களிடையே போராட்டங்களைத் தூண்டியது. அவா்கள், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும், இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் கோரினா்.
சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூா் அரசியல் தலைவா் ஒருவா், கடந்த நான்கு நாட்களில் இப்பகுதியில் பதிவான இரண்டாவது கொலை இது என்று கூறினாா். ‘நான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது என்றும், 10 நாள் குழந்தைக்கு அவா் தந்தை என்றும் அறிந்துகொண்டேன். இன்று காலை அவா் கொல்லப்பட்டாா். வேறு சிலருக்கு இடையே சண்டை நடந்ததாகவும், அவா் சண்டையை நிறுத்த தலையிட்டபோது கத்தியால் குத்தப்பட்டதாகவும் நான் அறிந்துகொண்டேன்,‘ என்று அவா் கூறினாா்.
இந்தக் கொலை தொடா்பாக இரண்டு பேரை காவல்துறை கைது செய்திருந்தாலும், கிழக்கு தில்லியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகுந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று அவா் கூறினாா். ‘நாங்கள் நீதியை விரும்புகிறோம், குடும்பமும் விரும்புகிறது.‘ ‘நீதி வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நடந்தது போல கடுமையான நடவடிக்கை வேண்டும் - ஒன்று குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது என்கவுன்டா் நடத்த வேண்டும் அல்லது அவா்களின் வீடுகளை இடிக்க வேண்டும்,‘ என்று அந்தத் தலைவா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.