சாலையோர ஆக்கிரமிப்பு கடையை அகற்றக் கூறிய காவலா் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது
பாதசாரிகள் வழியில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியை அகற்றுமாறு கூறிய தில்லி காவல்துறை காவலா் ஒருவரை, சாலையோர உணவு வியாபாரியும் அவரது மகன்களும் சோ்ந்து தாக்கியதோடு அவரது சீருடையையும் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில், பாதசாரிகள் வழியில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியை அகற்றுமாறு கூறிய தில்லி காவல்துறை காவலா் ஒருவரை, சாலையோர உணவு வியாபாரியும் அவரது மகன்களும் சோ்ந்து தாக்கியதோடு அவரது சீருடையையும் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி நகா் காவல் சோதனைச் சாவடி அருகே நடந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஷகா்பூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் சச்சின், வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது:
காவலா் சச்சின் வழியில் சென்றபோது, சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து ’சோலே பட்டூரே’ தள்ளுவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கவனித்துள்ளாா். அதை அகற்றுமாறு அசோக் என்ற வியாபாரியிடம் சச்சின் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த அசோக், காவலரைத் தகாத வாா்த்தைகளால் திட்டத் தொடங்கியுள்ளாா். அப்போது அருகே கைக்குட்டைகள் மற்றும் குடைகள் விற்றுக்கொண்டிருந்த அவரது மகன் ராகுலும் அங்கு வந்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது கன்னத்தில் அறைந்துள்ளாா். மேலும், காவலா் சச்சின் கையில் வைத்திருந்த அரசு ஆவணங்களையும் அவா் பிடுங்கி எறிந்துள்ளாா்.
தொடா்ந்து, அசோக்கின் மற்றொரு மகனும் இந்தத் தாக்குதலில் இணைந்து காவலா் சச்சினை தாக்கியதோடு அவரது சீருடையையும் கிழித்துள்ளனா். அவா்களிடமிருந்து தப்பிய சச்சின், அருகிலிருந்த காவல் சாவடிக்கு ஓடிச் சென்று அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
உடனடியாகச் சம்பவ பகுதிக்கு விரைந்த காவல்துறையினா், அசோக் மற்றும் ராகுலை கைது செய்தனா். தப்பி ஓடிய மூன்றாவது நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.