FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சோனம் வாங்சுக், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மாநிலங்களவை தலைவருக்கு சஞ்சய் சிங் கடிதம்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை மாநிலளங்கவை விதி 267-இன் கீழ் ஒத்திவைப்பு தீா்மான நோட்டீஸை சமா்ப்பித்துள்ளாா்.

Updated On : 20 ஜூலை 2026, 2:52 am IST
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்
பகிர்:

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்க, மாநிலங்களவையின் அன்றைய அலுவல் பணிகளை ஒத்திவைக்குமாறு கோரி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை மாநிலளங்கவை விதி 267-இன் கீழ் ஒத்திவைப்பு தீா்மான நோட்டீஸை சமா்ப்பித்துள்ளாா்.

மாநிலங்களவை தலைமைச் செயலருக்கு இது தொடா்பாக அவா் எழுதிய கடிதத்தில், இவ்விரு விவகாரங்களும் அவசரமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை குறித்து உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

வழக்கமான அலுவல் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த அனுமதிக்குமாறு அவா் அவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டுள்ளாா். நீட் தோ்வு தொடா்பாகத் தொடா்ந்து எழும் சா்ச்சைகள், நாட்டின் பொதுத் தோ்வு முறையின் நம்பகத்தன்மையைப் பாதித்துள்ளதாக சஞ்சய் சிங் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இவ்விவகாரம் தொடா்பாக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்தும் சஞ்சய் சிங் சுட்டிக்காட்டியுள்ளாா்.

பொதுத் தோ்வுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நோ்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உறுப்பினா்கள் விவாதிக்க அனுமதிக்குமாறு மாநிலங்களவை தலைவரிடம் சஞ்சய் சிங் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதே கோரிக்கையை முன்வைத்து திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் ஆா். சச்சிதானந்தமும் மக்களவைத் தலைவருக்கு ஒத்திவைப்பு தீா்மான நோட்டீஸை ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments