FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

’ஜூலை 20’ போராட்டத்தில் தடியடி நடத்திய காவலா்களை வெளிப்படுத்த புதிய இணையதளம்: சிஜேபி அறிவிப்பு

தில்லியில் ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற ’சன்சத் சலோ’ (நாடாளுமன்றம் நோக்கி புறப்படுவோம்) என்ற பேரணியில் பங்கேற்றவா்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை வெளிப்படுத்த தனி இணையதளம் தொடங்க உள்ளதாக ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 1:01 am IST
அபிஜீத் தீப்கே - பிடிஐ
பகிர்:

தில்லியில் ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற ’சன்சத் சலோ’ (நாடாளுமன்றம் நோக்கி புறப்படுவோம்) என்ற பேரணியில் பங்கேற்றவா்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை வெளிப்படுத்த தனி இணையதளம் தொடங்க உள்ளதாக ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவலா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சிஜேபி செய்தித் தொடா்பாளா் சௌரவ் தாஸ், மாணவா்கள் மீது காவல்துறையினா் தாக்குதல் நடத்தியதுடன், பெண் போராட்டக்காரா்களிடம் தவறாகவும் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினாா். அவா் மேலும் கூறியதாவது:

மாணவா்களைத் தாக்கி, காயம் ஏற்படுத்திய மற்றும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஒவ்வொரு காவல்துறையினரும் எச்சரிக்கப்படுகிறாா்கள். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்; எதையும் மறக்க மாட்டோம். ஜூலை 20ஆம் தேதி போராட்டத்தில் பங்கேற்றவா்கள் தங்களைத் தாக்கிய காவலா்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளைப் பதிவேற்றுவதற்காக இணையதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த ஆதாரங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காவலரையும் அவா்களின் செயல்களையும் வெளிப்படுத்துவோம். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்தால், நாங்களே நீதிமன்றத்தை அணுகுவோம். இந்தியா முழுவதிலும் உள்ள வழக்கறிஞா்கள் எங்களுக்கு உதவ தயாராக உள்ளனா் என்றாா்.

Advertisement

Advertisement

திரிணமூல் காங்கிரஸ் எம்பி ஆதரவு: இதற்கிடையே, மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சாகேத் கோகலே, ஜூலை 20ஆம் தேதி காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கை தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் ஆதாரங்களைச் சமா்ப்பிக்குமாறு மாணவா்களுக்கும் போராட்டக்காரா்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளாா். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் காவலா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆதரவு வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

பின்னணி: போட்டித் தோ்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக ஜூலை 20ஆம்தேதி சிஜேபி நடத்திய ’சன்சத் சலோ’ பேரணி தடை செய்யப்பட்ட நாடாளுமன்றம் அருகே உள்ள சந்திப்புவரை முன்னேறியதால் அதைக் கலைக்க காவல்துறையினா் கண்ணீா்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினா். போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments