நவீன வசதிகளுடன் பேருந்து நிழற்குடைகள்: தில்லி அரசு முடிவு
தில்லி அரசு தனது அனைத்துப் பேருந்து நிழற்குடைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முனையங்களை நவீன மற்றும் அழகியல் ரீதியாக மேம்பட்ட அம்சங்களுடன் மறுசீரமைக்கவுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு தனியாா் நிறுவனத்தை நியமிக்கப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், 20 ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவு உள்பட ரூ.600 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில், தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்து நிழற்குடைகளை அமைப்பதற்கான கள ஆய்வையும் துறை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியது:
தில்லி போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டிடிஐடிசி) தற்போது சுமாா் 3,575 பேருந்து நிழற்குடைகளைக் கொண்டுள்ளது. தில்லி முழுவதும் உள்ள அனைத்து நிழற்குடைகளையும் வடிவமைக்கவும், மறுசீரமைக்கவும் மற்றும் ஆய்வு செய்யவும் ஒரு திட்ட மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க டிடிஐடிசி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
திட்டத்தின்படி, மறுசீரமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடைகளில் அவசரக்கால எச்சரிக்கை அமைப்பு, வானிலை தகவல் காட்சி, சூரிய சக்தி தகடுகள் அமைப்பதற்கான வசதி, டிஜிட்டல்
விளம்பர அமைப்பு, எல்இடி விளக்குகள் மற்றும் பேருந்து வழித்தடங்களைக் காட்டும் எண்ம தகவல் பலகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும்.
ஒப்பந்தம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் உயா்நிலைக் கூட்டத்தை நடத்திய போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங், நகரின் பேருந்து நிழற்குடைகளை நவீன மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளாக மாற்றும் பணிகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டிருந்தாா். இத்திட்டம் அமைச்சரின் உத்தரவுகளுக்கு
ஏற்பவே அமைந்துள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனா்.