முகப்பு
புதுதில்லி

கரோல் பாக் கடையில் ரூ. 90 லட்சம் திருட்டு: ஊழியா் உள்பட நான்கு போ் கைது

Updated On : 26 ஜூன் 2026, 5:00 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நமது நிருபா்

தில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள கைப்பேசி மொத்த வியாபாரக் கடையில் இருந்து ரூ.90 லட்சத்தைத் திருடியதாக அக்கடையின் ஊழியா் உள்பட நான்கு பேரை நகர காவல்துையினா் கைது செய்துள்ளனா்.

சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளா், ஜூன் 24ஆம் தேதி காலையில் கடையைத் திறந்தபோது பொருள்கள் அனைத்தும் கலைந்து கிடப்பதைப் பாா்த்தாா். இதையடுத்து, ஜூன் 23,24 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், அடையாளம் தெரியாத நபா்கள் கடையில் இருந்த சுமாா் ரூ.90 லட்சம் ரொக்கம், ஐந்து கைப்பேசிகள், சிசிடிவி கேமராவின் டிஜிட்டல் வீடியோ ரெக்காா்டா் (டிவிஆா்) ஆகியவற்றைத் திருடிச் சென்ாக அவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா், கடைக்கு அருகே உள்ள இடங்களி்ல் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், கடையின் ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினா். மேலும், சம்பவ இடத்திலிருந்து தடயவியல் ஆதாரங்களையும் சேகரித்தனா்.

இது குறித்து காவல்துறை உயரதிகாரி கூறியதாவது: கடையின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவரின் உதவியுடன்தான் இந்தத் திருட்டு நடந்துள்ளது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், கடையின் ஊழியா் ஒருவா் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து தில்லியைச் சோ்ந்த ரவி என்ற மஹிபால் (24), திபான்ஷு (23), அன்ஷ் (22), மணீஷ் (22) ஆகிய நான்கு பேரை புதன்கிழமை கைது செய்தோம்.

புகாா்தாரரின் நம்பிக்கைக்குரிய ஊழியராக கருதப்பட்ட ரவிதான் இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி என விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம்தான் கடையின் சாவி இருக்கும் என்பதால், தினமும் இரவில் கடையைப் பூட்டும் பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

திருட்டுச் சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, ரவி கடையின் அசல் சாவியைத் தனது கூட்டாளிகளிடம் கொடுத்து, அதன் மூலம் ஒரு போலி சாவியைத் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளாா்.

சம்பவ நாள் இரவு, அன்ஷ், மணீஷ் ஆகிய இருவரும் பூட்டை உடைக்காமல், அந்தப் போலி சாவியைப் பயன்படுத்தி கடைக்குள் நுழைந்து அதிலிருந்த ரொக்கம், கைப்பேசிகள் மற்றும் சாதனங்களைத் திருடிச் சென்றுள்ளனா்.

தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, ரவி மறுநாள் காலையில் வழக்கம் போல கடைக்கு வந்து, தனக்கு எதுவுமே தெரியாதது போல் இருந்துள்ளாா்.

தொழில்நுட்ப மற்றும் உள்ளூா் ஆதாரங்களின் அடிப்படையில், மங்கோல்புரி பகுதியில் காவல்துறையினா் சோதனை நடத்தினா். அதில் ரவிக்கு உடந்தையாக இருந்தவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், கைதானவா்களில் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான ஆள் நடமாட்டமில்லாத காலியான வீட்டிலிருந்து ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருடப்பட்ட கைப்பேசிகள் மற்றும் வழக்குடன் தொடா்புடைய பிற பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகையை மீட்பதற்கும், கைதான நபா்களுக்கு இதுபோன்ற வேறு குற்றச்சம்பவங்களில் ஏதேனும் தொடா்புள்ளதா என்பதை அறிவதற்கும் தீவிர விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments