மங்கல இசை மன்னர்கள்
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்; பக்.416; ரூ.270; முத்து சுந்தரி பிரசுரம், பி-18, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17.
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்; பக்.416; ரூ.270; முத்து சுந்தரி பிரசுரம், பி-18, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17.
இசையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், மங்கல இசை என்று கூறப்படுவது நாதஸ்வர - தவில் இசையே. இந்தத் துறையில் சிறந்த நிபுணத்துவம் உடையவர்களாகவும் பெரும்புகழ் பெற்றவர்களாகவும் விளங்கிய 81 நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் 47 தவில் கலைஞர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் சிறு அறிமுகம், பெற்றோர், உடன் பிறந்தோர், குருநாதர், சீடர்கள், முக்கிய சம்பவங்கள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலான கலைஞர்களுக்கான பொதுக் குணங்களாக குருபக்தி, சுயமரியாதை, பொருள் சேர்ப்பதில் தீவிரமின்மை, திட்டமிடாத வாழ்க்கை, தனிப்பட்ட பலவீனம் போன்றவை இருந்திருப்பது புரிகிறது.
Advertisement
Advertisement
இறைபக்தி இல்லாதவர் என்று கருதப்பட்ட ராஜரத்தினம் பிள்ளை திருச்செந்தூர் முருகன் வீதியுலா வரும்போது தன் கழுத்திலிருந்த விலையுயர்ந்த நவரத்ன மாலையைக் கழற்றி முருகனுக்குக் காணிக்கையாக அளித்தது, சிதம்பரம் ராதாகிருஷ்ண பிள்ளையும் தருமபுரம் அபிராம சுந்தரமும் மேடையில் "பல்லவி' வாசிக்கப் போவது தெரிந்ததும் பல தவில் வித்துவான்கள் பயந்து ஓசைப்படாமல் எழுந்து வெளியேறியது, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தனது குருநாதர் நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை மீது கொண்டிருந்த அபாரமான குருபக்தி (நாகபட்டினம் என்கிற ஊரின் பெயர் தன் காதில் விழும்போதெல்லாம் ஒருமுறை எழுந்து நின்று வணங்குவார்), காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையிடம் சீடராகச் சேருவதற்கு வாய்ப்பாக அமைந்த சம்பவம் - இப்படி நூல் முழுக்க சுவையான தகவல்கள் அடங்கி உள்ளன. நூலாசிரியரே இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் எல்லாத் தகவல்களிலும் நம்பகத் தன்மையும் நேரடியாகப் பார்க்கும் உணர்வும் மேலோங்கி இருக்கின்றன. நூலைப் படித்து முடிக்கும்போது நாம் இழந்துவிட்ட கலைஞர்களையும் இழந்து கொண்டிருக்கும் கலையையும் பற்றிய கவலை மனதுக்குள் எழுகிறது.