செங்கடல் வழியாகச் செல்வதற்கு கட்டணம் வசூலிக்க ஹவுதிகள் திட்டம்! புதிய சர்வதேச நெருக்கடி?
செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் விதிக்க யேமனின் ஹவுதிகள் திட்டம்...
செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் திட்டமிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உலகின் சுமார் 12 சதவிகித வர்த்தகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் ஒரே நுழைவுப் பாதையான 32 கி.மீ. அகலமுடைய பாப் அல்- மண்டப் நீரிணையை ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படைகள் கட்டுப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஈரானின் உதவியுடன் பாப் அல்-மண்டப் நீரிணையைக் கடக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் அமைப்பை உருவாக்க ஹவுதிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசின் அமைச்சர் மொஅம்மர் அல்-எர்யானி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நடவடிக்கைகளுக்கு, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் உதவி செய்வதாக உளவுத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு கட்டணம் வசூலிக்கும் அமைப்பை ஹவுதிகள் நிறுவினால் அவர்களுக்கு நிரந்தர நிதியாதாரம் கிடைக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சூயஸ் கால்வாயின் வழியாகப் பயணம் மேற்கொள்ள கப்பல்கள் பாப் அல்-மண்டப் நீரிணையைக் கடக்க வேண்டியுள்ளதால் சர்வதேச அளவில் இப்பகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனால், இந்த நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு ஹவுதிகள் கட்டணம் வசூலித்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராகவும், காஸா மற்றும் ஈரானுக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியின் வழியாகப் பயணித்த கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
Yemen's Houthi rebels have been planning to levy fees on ships passing through the Red Sea.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.