கொங்கு நாட்டு வைரங்கள்
கொங்கு நிலத்தின் இரும்பு நரம்புகளாக வாழ்ந்த மனிதர்களின் பெருமைகளை ஆழமாக நமது உள்ளத்தில் இந்த நூல் விதைக்கிறது.
கொங்கு நாட்டு வைரங்கள் - முனைவர் எஸ்.கே. கார்வேந்தன்; பக். 320; ரூ. 350; குமரன் பதிப்பகம், சென்னை-600 011, ✆ 044- 2435 3742.
கொங்கு மண்டலத்தில் விடுதலைப் போராட்ட காலம் தொடங்கி இன்றுவரை தேசத்தின் மேன்மைக்காக பாடுபட்ட சான்றோர் பலர் உருவாகி பல்வேறு தளங்களில் தடம் பதித்துள்ளனர். அத்தகைய சிறப்புக்குரிய சான்றோர் 25 பேரின் வாழ்வும் பணியும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நூலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
சே.ப. நரசிம்மலு நாயுடு இளம் வயதிலேயே சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். கோவையின் பல புகழ்பெற்ற பொது அமைப்புகள் நரசிம்மலு நாயுடுவால் தொடங்கப்பட்டவை. டவுன் ஹால் எனப்படும் விக்டோரியா முனிசிபல் ஹால் இவரது முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. சிறுவாணியில் அணை கட்டி, கோவைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டம் நரசிம்மலு நாயுடுவால் முன்வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதுதான்.
Advertisement
Advertisement
ஜி.டி.நாயுடு இந்தியாவின் முதல் மின்சார மோட்டாரை (1930) வடிவமைத்தவர். ரேஸர் பிளேடு, குறைவான விலையில் கேமரா, வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கியுள்ளார். கோவை பகுதியை தொழில் நகரமாக மாற்றியதில் இவரது பங்கு அளப்பரியது.
கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் முறையான கணிதப் பயிற்சி இல்லாமல், தனது அசாத்திய திறமையால் உலகை வியக்க வைத்தவர். வாழ்நாளில் 3,900-க்கும் மேற்பட்ட கணித சூத்திரங்களை உருவாக்கியவர்.
இவர்கள் மட்டுமல்ல, நீதிபதி ப.சதாசிவம், மகாவித்வான் வாசுதேவ முதலியார், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை, கே.வி.சுப்பிரமணிய ஐயர், உடுமலை நாராயண கவி, திருப்பூர் குமரன் ஆகியோர் உள்பட வாழுங்காலத்தை வரலாறாக்கிய மாமனிதர்கள், வளரும் சமுதாயம் தழைக்க உழைத்த மகான்களின் விவரங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. கொங்கு நிலத்தின் இரும்பு நரம்புகளாக வாழ்ந்த மனிதர்களின் பெருமைகளை ஆழமாக நமது உள்ளத்தில் இந்த நூல் விதைக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.