ஸ்ரீமத் பாகவதம்
ஒவ்வொரு பகுதியையும் கையாளும்போது, பல புராண-இதிகாச கதைகளையும் எடுத்துக்காட்டுகளாகச் சேர்த்து கதைச் சொற்பொழிவு போன்ற நடையில் நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர்.
ஸ்ரீமத் பாகவதம் - சுவையான கருத்துக்கள்- வி.கணபதி; பக். 368; ரூ. 350; வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை 600 017, ✆ 044-2434 2810.
ஸ்ரீமத் பாகவதம் என்று பொதுவாக நாம் அறிவது வியாச மகரிஷியால் இயற்றப்பட்ட இதிகாச பாகவதமாகும். கிருஷ்ணாவதார லீலைகளை அதிகம் கூறும் நூலாக இது அறியப்பட்டாலும், இதன் மூல நூல் மிகப் பெரிது; 12 கீதைகள், விரிவாகக் கூறப்பட்ட மகாவிஷ்ணுவின் நான்கு அவதாரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டது; 18,000 சுலோகங்களைக் கொண்டு பன்னிரண்டு ஸ்கந்தங்களில் அமைந்ததாகும். பாண்டவருள் ஒருவனான அர்ஜுனனின் பேரன் பரீக்ஷித்துக்கு சுக முனிவர் கூறுவதாக இது அமைக்கப்பட்டுள்ளது.
வேத-உபநிஷத்துக்களைத் தொகுத்தும் மகாபாரதம் இயற்றியும் திருப்தி அடையாத வியாசர் மகா பாகவதத்தை இயற்ற எண்ணினார் என்பது சான்றோர் கூற்று. இதிலிருந்து பாகவதத்தின் பெருமையை நாம் உணரலாம்.
Advertisement
Advertisement
அவ்வாறான மிகப் பெரிய நூலிலிருந்து பிரதானமான பகுதிகளைத் தேர்வு செய்து, முக்கியமான சுலோகங்களைத் தமிழாக்கம் செய்து, ஒவ்வொரு கதையையும் வேறு பல கதைகளுடனும் கோத்து 16 அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார் இந்நூலாசிரியர்.
பாகவதத்தில் கூறப்பட்டுள்ள பிரதான கதைகளை நாம் முன்பே கேட்டிருந்தாலும் கூட, புதிதாகச் சொல்ல வந்தவர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவோம். அந்த வகையில் அஜாமிளன், குசேலன் சரிதங்கள் போன்றவை மிக நயமாகக் கூறப்பட்டுள்ளன. 'நாராயண' என்ற திருநாமத்தின் மகத்துவம் அஜாமிளன் சரிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பக்தி என்பது யாது, பல வகை பக்திகள், ஒவ்வொன்றையும் பின்பற்றியவர் முக்தியடைந்த விதம் மிகவும் எளிய சொற்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியையும் கையாளும்போது, பல புராண-இதிகாச கதைகளையும் எடுத்துக்காட்டுகளாகச் சேர்த்து கதைச் சொற்பொழிவு போன்ற நடையில் நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். இந்த அமைப்புதான் இப்புத்தகத்தின் சிறப்பு.