முகப்பு
ஆன்மிகம்

மத நல்லிணக்கத்துக்கு உதாரணம்: சொந்த செலவில் அனுமன் கோயிலை புதுப்பித்த முஸ்லிம்!

குஜராத்தில் 500 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலை முஸ்லிம் ஒருவர் தன் சொந்த செலவில் புதுப்பித்து வரும் தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:12 PM
பகிர்:

அகமதாபாத்: குஜராத்தில் 500 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலை முஸ்லிம் ஒருவர் தன் சொந்த செலவில் புதுப்பித்து வரும் தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. 

குஜராத், அகமதாபாத் மாவட்டத்தில் மிசோபூர் பகுதியில் உள்ள அனுமன் கோயில் 500 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டதாகும். மிகவும் பழமையான இந்தக் கோயில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. 

43 வயதுடைய மொயின் மேமன் என்பவர் தினமும் சிதிலமடைந்த அந்தக் கோயிலின் வழியாகச் செல்வாராம். அந்தக் கோயிலை பார்க்கும் போதெல்லாம் மிகுந்த மனம் வருந்தி வந்தார். கட்டட வேலை செய்து வரும் இவர், அனுமன் கோயிலை எப்படியாவது புதுப்பிக்க வேண்டும் என்ற ஆசை மேமனுக்கு எழுந்தது. 

இதையடுத்து, மேமன் அந்தக் கோயிலின் அர்ச்சகரான ராஜேஷ் பட்டிடம் தமது ஆசையைக் குறித்து விளக்கினார். அர்ச்சகர் சம்மதம் அளித்ததையடுத்து, கோயிலை புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணியில் மேமன் ஈடுபட்டார். 

இது பற்றி மேமன் கூறிய போது,

நான் ஒரு நாளைக்கு ஐந்துமுறை தவறாமல் தொழுகை செய்துவருகிறேன். மிகவும் சிதிலமடைந்த இந்தக் கோயிலை புனரமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஆசை இருந்து வந்தது. 

இதுகுறித்து அர்ச்சகரிடம் கேட்ட போது, அவரும் சம்மதம் தெரிவித்தார். மிகவும் சந்தோஷத்தோடு என் சொந்த செலவில் புதுப்பிக்கிறேன். ஓரிரு வாரங்களில் புதுப்பிக்கும் பணிகள் முழுவதும் முடிந்துவிடும் என்று அவர் கூறினார். 

இந்தியாவில் நிகழும் சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு இதுவே சரியான உதாரணம் என்று கோயில் அர்ச்சகர் ராஜேஷ் பட் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.