வரலட்சுமி விரதம்! எளிய முறையில் அனுஷ்டித்து லட்சுமி கடாட்சம் பெறலாம்!
இன்று வரலட்சுமி விரதத்தை எளிய முறையில் அனுஷ்டித்து லட்சுமி கடாட்சம் பெறலாம் என்பது பற்றி...
வரலட்சுமி விரதம் இன்று வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வரலட்சுமி விரதம் என்றால் நோன்பு நோற்று, வீட்டில் கலசம் வைத்து அலங்கரித்து முறையாக பூஜை செய்ய வேண்டும்.
வரலட்சுமி விரதம் இந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு நாள்.
Advertisement
Advertisement
எளிமையான பூஜை
வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். சுமங்கலிப் பெண்கள் இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். புதிதாகத் திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இந்த விரதத்தைத் தொடங்கலாம்.
எல்லோராலும் மிக விசேஷமாக செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு பூஜை செய்தாலே லட்சுமி கடாட்சத்தைப் பெறலாம். வீட்டில் பூஜையறையை சுத்தம் செய்து விளக்கேற்றி, பால், பழம் வைத்து, பக்திப் பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து, வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களின் காலில் வணங்கி விரதத்தை நிறைவு செய்யலாம்.
சாஸ்திர முறைப்படி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்திரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யலாம். சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். பூஜை முடிந்ததும் அன்றைய நாள் இரவு அம்மனுக்கு ஆலம் (குங்கும நீரில் வெற்றிலை வைத்து கற்பூரம் ஏற்றுதல்) கரைப்பது முக்கியம். கண்திருஷ்டி நீங்குவதாக ஐதீகம்.
வரலட்சுமி விரதத்தின்போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.