திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!
திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா பற்றி..
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
அரோகரா கோஷம் வழங்கிடப் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்கிடச் சுவாமி தரிசனம் செய்தனர்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி 15 நாள்கள் கோலாகலமாக நடைபெறுகிறது.
பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதையடுத்து தினமும் காலையிலும் இரவிலும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் வருகின்ற 28ஆம் தேதி கைப்பாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கோயிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளிலான யானை வாகனத்தில் எழுந்தருளும் முருகப் பெருமான் தெய்வானையைப் பக்தர்களும் கோயில் சீர்பாதங்களும் கைப்பாரமாக சுமந்து செல்வது தனிச் சிறப்பாகும். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து விழாவில் வரும் ஒன்றாம் தேதி பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வும், இரண்டாம் தேதி சூரசம்ஹாரமும், மூன்றாம் தேதி முருகப்பெருமானுக்குத் தங்க கிரீடம் சூட்டி நவரத்தினங்களால் செங்கோல் வழங்கும் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
திருவிழாவில் முத்தாய்ப்பாக அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் , 4 -ம்தேதி முருகப்பெருமான் தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளைக் கோவில் துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வையில் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகிறது.