தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் மே 26-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா!
தக்கோலம் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா பற்றி..
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலம் அருள்மிகு ஜலநாதீஸ்வரா் கோயிலில் மே 26-ஆம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி ஸ்ரீ தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளன.
தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருக்கோயிலான இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு இடது காலைக் குத்துக்காலிட்டு அமர்ந்து அபூர்வமாகக் காட்சியளிக்கிறார். ஸ்ரீ தட்சிணாமூா்த்தி அமைந்துள்ள இந்தக் கோயில், தமிழ்நாட்டின் 3-ஆவது குரு பரிகார தலமாகக் கருதப்படுகிறது.
வாக்கியப் பஞ்சாங்கப்படி, மே 26 ஆம் தேதியன்று வைகாசி 12-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11.08 மணியளவில் குருபகான் மிதுன ராசியில் இருந்து புனர்பூசம் 4 ஆம் பாதம் கடக ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.
Advertisement
Advertisement
இதனையொட்டி திருவூறல் எனும் தக்கோலம் பேரூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருக்கும் குருபகவான் அருள்மிகு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தரிசனமும் நடைபெற உள்ளது.
குருப்பெயர்ச்சியால் பலனடையும் ராசிகள் - மிதுனம், மீனம், மகரம், விருச்சிகம், கன்னி.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் - கடகம், ரிஷபம், மேஷம், கும்பம், தனுசு, துலாம், சிம்மம்.
விழா ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ந. அருள்பிரகாசம், ஆய்வாளர் வ. அமுதா, செயல் அலுவலர் ப. பரந்தாமக் கண்ணன் மற்றும் பாபு குருக்கள், கார்த்திகேயன் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அரக்கோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் தக்கோலத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு அரக்கோணத்திலிருந்தும் வேலூர், காஞ்சிபுரத்திலிருந்தும் எளிதில் அடையக் கூடிய வகையில் போக்குவரத்து வசதிகள் உள்ளன.