FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயில்கள்

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி!

மணமாலை வரம் தரும் ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி திருக்கோயில்..

Updated On : 14 ஜூலை 2026, 4:39 pm IST
ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி
பகிர்:

சென்னை, மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி திருக்கோயில். மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் முருகப்பெருமான், வள்ளி - தேவசேனாவோடு திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தல சிறப்பு

1981 ஆம் ஆண்டு சங்கராச்சாரியார் அவர்களால் அருள்மிகு கருணை கணபதி முதன்முதலில் இங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு வள்ளி தேவயானை சமேத கல்யாண கந்தசுவாமி கோயில் நிர்வாக குழுவால் ஸ்தாபிக்கப்பட்டது. கல்யாண கோலத்தில் காட்சிதரும் கல்யாண கந்தசாமியை இமைக்காது பார்த்துக் கொண்டே இருக்கலாம். இத்தலத்து முருகன் அவ்வளவு அழகு.

Advertisement

Advertisement

கோயிலில் நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்கக் கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இக்கோயிலில் முருகப்பெருமானைத் தரிசிக்க ஆறு படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு படிகளுக்கும் படி பூஜை நடைபெறுகிறது.

பங்குனி உத்திரம், கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இத்திருத்தலத்தில் கல்யாணக் கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருப்பதால் கந்தசஷ்டி விழாவில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் இங்கு நடைபெறுவதில்லை.

கோயிலில் உள்ள சன்னதிகள்

கிழக்கு நோக்கிய கருவறைக்கு முன்பு தெற்கே ஸ்ரீ கருணை கணபதியும், வடக்கே அங்காரகனும் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ஜெய துர்க்கா, பிராகாரத்தில் ராமர், சீதா, லட்சுமணருடன், ஆஞ்சநேயரும் அருள்புரிகின்றனர். அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரரும் வீற்றிருக்கிறார். நவக்கிரக சன்னதியும் உள்ளது. சீரடி சாய்பாபாவும், அங்காரகனாகிய செவ்வாய் பகவான் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.

பரிகாரம்

இத்தலத்தில் அங்காரகருக்கு தில பத்ம தானம் என்ற சிறப்புப் பரிகாரம் நடைபெறுகிறது. இதன் மூலம் அங்காரக தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், செவ்வாய்க்கிழமைகளில் துவரம் பருப்புடன், செவ்வரளி புஷ்பம், எலுமிச்சம்பழம் வைத்துத் தொடர்ந்து ஒன்பது வாரங்களுக்கு முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்தால் திருமணத் தடை விலகும்.

விசேஷங்கள்

முருகப் பெருமானுக்கு உரிய அனைத்து விசேஷ நாள்களும் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கும்பாபிஷேகம்

இக்கோயில் இதற்கு முன்பு மூன்று முறை குடமுழுக்கு கண்டுள்ள நிலையில், நான்காவது முறையாகத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூலை 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாகவும், வெகு விமரிசையாகயும் நடைபெற்றது.

அமைவிடம்

சென்னை, மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் பாலையாக் கார்டன் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயில் திறப்பு

அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.

சென்னை நகரத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் திருமண நலன், குடும்ப அமைதி மற்றும் ஆன்மிக வளம் வேண்டி பக்தர்கள் தரிசிக்கும் முக்கிய முருகத் தலமாக இது விளங்குகின்றது.

Sri Kalyana Kandaswamy Temple | ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி திருக்கோயில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments