முகப்பு
கிரிக்கெட்

பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை சமன் செய்த மே.இ.தீவுகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 27 ஜனவரி 2025, 4:04 pm IST
- படம் | AP
பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜனவரி 25) முல்தானில் தொடங்கியது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 163 ரன்களுக்கும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 154 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

முதல் நாளில் மட்டும் 20 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. முதல் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 9 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

254 ரன்கள் இலக்கு

ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று (ஜனவரி 26) மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 ரன்கள் முன்னிலையுடன் அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் கேப்டன் கிரைக் பிரத்வெயிட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 74 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டெவின் இம்லாச் 35 ரன்களும், அமிர் ஜாங்கோ 30 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் சாஜித் கான் மற்றும் நோமன் அலி தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். காசிஃப் அலி மற்றும் அப்ரார் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பாபர் அசாம் 31 ரன்களிலும், கம்ரான் குலாம் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சௌத் ஷகில் 13 ரன்களுடனும், காசிஃப் அலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் வெற்றி பெற 178 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற 6 விக்கெட்டுகளும் தேவைப்பட்டன.

அபார வெற்றி

வெற்றி பெற 178 ரன்கள் தேவை என்ற நிலையில், பாகிஸ்தான் அணி மூன்றாம் நாளில் அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் அந்த அணி 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் 25 ரன்களும், சல்மான் அகா 15 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் 120 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கேன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கெவின் சின்க்ளேர் 3 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ஜோமெல் வாரிக்கேன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.