தனது தந்தை இறந்த அடுத்த நாளே இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இலங்கை அணியின் இளம் வீரர்களில் ஒருவரான துனித் வெல்லாலகேவின் தந்தை நேற்று முன் தினம் (செப்டம்பர் 18) திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அந்த நாளில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் விளையாடின.
ஆப்கானிஸ்தானுடனான போட்டி நிறைவடைந்த பிறகு, துனித் வெல்லாலகேவுக்கு அவரது தந்தை இறந்த துயரச் செய்தியை இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்தது. அவர் உடனடியாக அன்று இரவே விமானம் மூலம் இலங்கை சென்றடைந்தார். இதனால், வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் விளையாடுவதற்காக துனித் வெல்லாலகே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தடைந்தது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலிருந்து இலங்கை அணியின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் விளையாட துனித் வெல்லாலகே தயாராக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இலங்கை அணி வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானையும், செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவையும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா - பாக். போட்டிக்கு மீண்டும் நடுவராகும் பைகிராஃப்ட்; இந்த முறை சூர்யகுமார் கை குலுக்குவாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.