1 ரன் ஏன் எடுக்கவில்லை? சோகத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்ட டேவிட் மில்லர்!
தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் டேவிட் மில்லரின் செயல் குறித்து...
நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. நடப்பு சீசனில் குஜராத்துக்கு இது முதல் வெற்றியாகும்.
இந்தப் போட்டியில் 19.5 பந்தில் 1 ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் டேவிட் மில்லர் நிராகரித்தது மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
டாஸ் வென்ற தில்லி பந்துவீச, குஜராத் அணி 20 ஓவர்களில் 210/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 20 ஓவர்களில் 209/8 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
Advertisement
இந்தப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் தேவையானபோது 19ஆவது ஓவரில் (வைட், 6, 4, 6, 1, 4, 1) 23 ரன்கள் எடுத்ததால், தில்லி அணி வெல்வதற்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடைசி ஓவரில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி (4, W, 1, 6, 0, W) 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் இருக்கும்போது 19.5 பந்தில் 1 ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் டேவிட் மில்லர் நிராகரித்தார்.
பின்னர் கடைசி பந்தில் ரன் ஓடும்போது குல்தீப் ரன் அவுட்டானார். வைட் ரிவிவ் எடுத்தும் பயனில்லாமல் தில்லி தோற்றது.
இந்தக் காரணத்தினால் டேவிட் மில்லர் மிகுந்த மனமுடைந்து, கண்ணீர் விட்டபடி சென்றார். இருந்தும் அவரது செயலைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் டேவிட் மில்லர் காயம் காரணமாக ரிடையர் ஹர்ட் ஆகி மீண்டும் இறுதியில் வந்து சிறப்பாக விளையாடி பின்னர் கடைசி 2 பந்தில் சொதப்பி ஏமாற்றம் அளித்தார்.