டேவிட் மில்லரின் எண்ணம் தவறு கிடையாது; முன்னாள் இந்திய கேப்டன் ஆதரவு!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ரன் ஓட மறுத்த டேவிட் மில்லரின் எண்ணத்தை தவறென கூறிவிட முடியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ரன் ஓட மறுத்த டேவிட் மில்லரின் எண்ணத்தை தவறென கூறிவிட முடியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு, கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட 19.5-வது பந்தில் டேவிட் மில்லர் ஒரு ரன் ஓட மறுத்தார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை டேவிட் மில்லர் மிஸ் செய்து ரன் ஓட கீப்பர் ஜோஸ் பட்லர் குல்தீப் யாதவை ரன் அவுட் செய்தார். இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Advertisement
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ரன் ஓட மறுத்த டேவிட் மில்லரின் எண்ணத்தை தவறென கூறிவிட முடியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் மில்லர் நன்றாக விளையாடி ரன்கள் குவித்ததால், அவரால் தில்லி அணிக்கு வெற்றி பெற்றுத் தர முடியும் என நம்பினார். அவரது அந்த எண்ணத்தை தவறு என்று கூறிவிட முடியாது. இறுதியில் பிரசித் கிருஷ்ணா கடைசி பந்தை மெதுவாக பௌன்சராக வீசியதால், டேவிட் மில்லரால் போட்டியை அணிக்கு சாதகமாக முடித்துக் கொடுப்பது மிகவும் கடினமாக மாறியது. அழுத்தமான சூழலில் இதுபோன்று நடக்கும்.
இதுபோன்ற மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் போட்டி குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். தில்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இந்தப் போட்டியின் முடிவு எனக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 1986 ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டியை நினைவுப்படுத்தியது. ரவி சாஸ்திரி ஒரு ரன் எடுத்தது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை சமனில் முடிக்க உதவியது. அந்தப் போட்டியில் ரவி சாஸ்திரி ஒரு ரன் எடுத்து ஆட்டம் சமனில் இருந்தபோது, இந்திய அணி கடைசி விக்கெட்டினை இழந்தது.
முக்கியமான நேரத்தில் ரவி சாஸ்திரி எடுத்த ஒரு ரன் ஆட்டம் சமனில் முடிய காரணமாக அமைந்தது. 19.5-வது பந்தில் மில்லர் ஒரு ரன் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில், குல்தீப் யாதவ் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தார். அவர் கடைசி பந்தில் ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்திருக்க நிறைய வாய்ப்பிருந்தது என்றார்.