நினைத்தது நடந்தது..! ஆட்ட நாயகன் விருது வென்ற அறிமுக வீரர்!
ஆட்ட நாயகன் விருது வென்ற சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி அறிமுக வீரரின் பேட்டி குறித்து...
அறிமுக வீரர் பிரஃபுல் ஹிங்கே ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
ஐபிஎல் லீக் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல் அணிகள் நேற்றிரவு ஹைதராபாத் திடலில் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவிக்க, தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஹைதராபாத் அணிக்காக நேற்று களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே, முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். மொத்தமாக 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆட்ட நாயகன் விருது வென்றதும் பேசியிருப்பதாவது:
Advertisement
Advertisement
நான் இதுபோல நடக்க வேண்டுமென நினைத்தேன். கடந்தாண்டு இதை எழுதி வைத்தேன். நான் எங்கு முதல் போட்டியில் விளையாடினாலும் நிச்சயமாக 4 அல்லது 5 விக்கெட்டுகளை எடுப்பேன். பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைத்தேன்.
வெளிப்பாடு (manifestation) மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது; ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
13 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போதே கிளப்பில் சேர தந்தையைக் கேட்க, அவர் மறுத்துவிட்டார். பின்னர் எப்படியோ சேர்ந்துவிட்டேன். அப்போதிருந்து விளையாடி வருகிறேன். தற்போது இந்த இடத்தில் நிற்பது மகிழ்ச்சி. எனது குடும்பத்துக்கு இந்த விருதினை சமர்ப்பிகிறேன்.
சூர்யவன்ஷியை முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்வேன் எனக் கூறியிருந்தேன். பயிற்சியாளர் வருண் அண்ணா மிகவும் உதவினார். காயத்தின்போது எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றார்.