பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது சென்னை அணி புகார் அளித்துள்ளதைப் பற்றி...
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் டிஜே பாடல் போட்டு அவமதித்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) புகாரளித்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 14 இந்தியா முழுவதும் உள்ள 14 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கடந்த ஏப்.5 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 250 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து பேட்டிங் ஆகிய சென்னை அணி 207 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Advertisement
ஐபிஎல் தொடரில் திடல்களில் உள்ளூர் அணிகளுக்கு சாதகமாக பாடல்கள் போடுவதை டிஜேக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் திடலில்கூட தோனி, ருதுராஜ் உள்ளிட்டோர் திடலுக்குள் நுழையும்போது மாஸ் பிஜிம்கள், பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், பாடல் ஒலிபரப்பியதில் புதிய பிரச்சினையாக சென்னை அணியின் போட்டியின் போது கானா அப்புவின் பாடலான, “ தோசை இட்லி சாம்பர் சட்னி..” என்ற பாடலை டிஜே ஒலிபரப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடல் போட்டு தங்களை அவமதித்து விட்டதாக சென்னை அணி நிர்வாகத்தினர் பிசிசிஐயில் புகாரளித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் பிரபலமான உணவுகள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி கேலிக்காக பயன்படுத்தப்பட்டாலும் சென்னை போட்டியின்போது அவமதிக்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சென்னை அணியிடம் இருந்து புகார் வந்துள்ளதாகவும், அதனை ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இந்தப் பாடலை பாடி விமர்சனங்களை எதிர்கொண்டார். தற்போது மீண்டும் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டதால், புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் அணியக்கு சாதகமாக பாடல்கள் எழுப்பப்பட்டாலும், அது அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் போட்டியின் போது, பெங்களூரு அணிக்காக 4 ஸ்பீக்கர்களில் பாடல் போடுவதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரேயொரு ஸ்பீக்கரில் மட்டும் பாடல் போடுவதாக சென்னை அணி மற்றும் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் திடலிலேயே குற்றம்சாட்டி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சமீப காலமாகவே சென்னை - பெங்களூரு அணிகள் இடையேயான மோதலால் ரசிகர்களும் முட்டி மோதிக்கொள்ளும் சூழல் அதிகளவில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரசிகர்கள் திடல்களுக்கு வெளியேயும் மோதிக்கொள்ளும் சூழல்கள் நிலவுவதால், இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.