பிங்க் பந்து ஆட்டத்துக்கு கௌதம் கம்பீர் ஆதரவு!
பிங்க் பந்து ஆட்டத்துக்கு கௌதம் கம்பீர் ஆதரவளித்தது பற்றி...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமான வெளிச்சம் காரணமாக, ஆட்டத்தை சிவப்பு பந்திலிருந்து பிங்க் பந்துக்கு மாற்றும் ஐசிசி-யின் யோசனைக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 6 முதல் 10 வரை பஞ்சாப் மாநிலம் முல்லாபூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுத் திடைலில் நடைபெர உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் மோசமான வெளிச்சம் காரணமாக சிவப்பு பந்துக்கு பதில் பிங்க் பந்துக்கு மாறும் யோசனையில் ஐசிசி உள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து கௌதம் கம்பீர் பேசியதாவது:
எனக்கு இது மிகவும் பிடிக்கும். ஏனென்றால், வெற்றிக்கான வாய்ப்பு நம்மிடம் இருந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முந்தைய கடைசி டெஸ்ட் போட்டியில் நீங்கள் விளையாடுவதாகவும், தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அந்தப் போட்டியில் உங்களுக்கு இருப்பதாகவும் கற்பனை செய்து பாருங்கள். வெளிச்சம் மோசமாக இருந்தால் அது நடைபெறாது. ஆகவே பிங்க் பந்து மாற்றத்தை நான் ஆதரிக்கிறேன்.
இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ள நேரத்தில் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். வீரர்களுக்கு இது சற்று கடினமாகவும் நியாயமற்றதாகவும் இருக்கும் என்று எனக்குத் தெரியும். டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியில் விளையாடுவதாக எண்ணிப் பாருங்கள்.
மோசமான வெளிச்சம் காரணமாக ஐந்து நாள்கள் உங்களால் முழுமையாக விளையாட முடியவில்லை என்றால் அது நியாயமற்றதாக இருக்கும். எனவே, இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இது நேர்மறையான செயல்பாடு. இரு அணிகளும் இதனை நேர்மறையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் கௌதம் கம்பீர்.