துரந்தர் படத்தினால் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி..! 14 வயதில் பார்க்க வேண்டிய படமா?
சர்ச்சையில் சிக்கிய யு19 இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து...
யு19 இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி (14 வயது) துரந்தர் திரைப்படம்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
துரந்தர் திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளதால், 18 வயதுக்கு அதிகமானோர் மட்டுமே பார்வையிட வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிச,5ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் மிகுந்த வரவேற்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
பிசிசிஐ வழங்கும் நமன் விருது விழாவில் வர்ணனையாளர் அர்ஷா போக்லே, “உங்களுக்குப் பிடித்த படம் எது?” எனக் கேள்வி எழுப்புவார். அதற்குப் பதிலளித்த வைபவ் சூர்யவன்ஷி, “துரந்தர்” எனப் பதிலளிப்பார்.
ஏ சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பார்த்தது ஏன் என சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
யு19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி பாகிஸ்தான் பந்துவீச்சாளரைப் பார்த்து தனது காலணியைக் காண்பிப்பார், இந்த நிகழ்வு அப்போது மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தற்போது, துரந்தர் 2 (துரந்தர் தி ரிவெஞ்ச்) இன்றுமுதல் உலகம் முழுவதும் வெளியாகியது. இதன் சிறப்புக் காட்சிகள் நேற்று (மார்ச்.18) வெளியாகி சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.