கிடைக்கும் வாய்ப்புகளை ரிங்கு சிங் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: இர்பான் பதான்
ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ரிங்கு சிங் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ரிங்கு சிங் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிங்கு சிங் எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங், வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்குப் பிறகு, ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ரிங்கு சிங் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங்குக்கு எந்த அளவுக்கு போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மிகவும் அபாரமாக விளையாடினார். அந்த சீசனில் 150-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் 400-450 ரன்கள் குவித்தார். ஆனால், அதன் பிறகு அவர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
அதன் பின், அவருக்கு போதுமான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதனால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு அதிக ரன்கள் குவிக்க வேண்டும். டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவரால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ரிங்கு சிங்குவின் ஃபார்ம் கொல்கத்தா அணிக்கு ஒரு பிரச்னையாக மாறியுள்ளது என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருகிற மார்ச் 29 ஆம் தேதி விளையாடும் அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.