டி20 உலகக் கோப்பை தோல்விக்கு நியூசிலாந்தை டி20 தொடரில் பழிவாங்கிய தென்னாப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணி குறித்து...
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என இளம் வீரர்கள் உடன் பங்கேற்ற தென்னாப்பிரிக்க அணி வென்று அசத்தியது. நியூசிலாந்து மண்ணில் 2022க்குப் பிறகு முதல்முறையாக இருதரப்பு தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.
கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
நியூசிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இளம் தென்னாப்பிரிக்க அணி சென்றது. முதல் போட்டியில் தெ.ஆ. வெல்ல, 2, 3ஆவது போட்டிகளில் நியூசிலாந்து வென்றது. நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று 2-2 என தொடர் சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில், நடைபெற்ற ஐந்தாவது டி20யில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 187/4 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கானர் எஸ்டர்ஹுய்சன் 33 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 154/8 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பெவன் ஜேக்கப்ஸ் 36 ரன்கள் எடுத்தார். தெ.ஆ. அணியில் பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஸி, வியான் முல்டர், ஆட்னில் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரை 3-2 என வென்றது. பேட்டிங்கில் அசத்திய தெ.ஆ. வீரர் கானர் எஸ்டர்ஹுய்சன் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்க, தென்னாப்பிரிக்க அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது. இந்தத் தோல்விக்கு தற்போது பழிவாங்கியது.