ஐபிஎல் 2026: ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் 300 ரன்களை குவிக்குமா?
ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி குறித்து...
ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றிரவு (மார்ச் 28) 7.30 மணிக்கு சின்னசாமி திடலில் மோதுகிறது.
பேட்டிங்கில் பலம்வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபிக்கு எதிரான இந்தப் போட்டியில் 300 ரன்களை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2024 சீசனில் ஆர்சிபிக்கு எதிராக 20 ஓவர்களில் 287/3 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. டிராவிஸ் ஹெட் 102, கிளாசன் 67, அபிஷேக் சர்மா 34, மார்க்ரம் 32, அப்துல் சமாத் 37 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 262/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83, டு பிளெஸ்ஸி 62 ரன்கள் குவித்தார்கள்.
கடந்த 2025 சீசனில் மீண்டும் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 231/6 ரன்கள் குவித்தது. ஆர்சிபி 189க்கு ஆல் அவுட்டானது.
இஷான் கிஷன் நிகழ்ச்சி ஒன்றில், “டிராவிஸ் ஹெட்டுக்கு மிகவும் பிடித்த அணி என்றால் அது ஆர்சிபிதான்” எனக் கூறினார். சன்ரைசர்ஸ் அணி 13 -11 என்ற அளவுக்கு ஆர்சிபியிடம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சன்ரைசர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் என இடதுகை பேட்டர்கள் பவர்பிளேயில் ஆதிக்கம் செலுத்தவுள்ளனர். ஹென்ரிச் கிளாசென், லியம் லிவிங்ஸ்டனும் அவர்களுக்குத் துணை நிற்கின்றனர். ஆல்-ரவுண்டர்களாக நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே மிளிர்கிறார்கள்.
நடப்பு சாம்பியனான ஆர்சிபியில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரில்லாத ஆர்சிபி அணி சற்று வலுவிழந்த அணியாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.