FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்!

நான் விளையாடிய அணிகளில் மிகவும் வெறுப்பது ஆஸ்திரேலிய அணியைத்தான். அவர்கள் பழைய எதிரி என்பதற்காக...

Updated On : 15 செப்டம்பர் 2018, 12:19 pm IST
பகிர்:

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது:

2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோதும் நான் கோபமாக இருந்ததில்லை. அணி வீரர்களிடம் இதுகுறித்துக் கூறினேன். இதை ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் டேரன் லேமனிடம்  எடுத்துச் சென்றார் இங்கிலாந்துப் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ். 

அந்த வீரரிடம் டேரன் லேமன் கேட்டார், மொயீன் அலியை ஒசாமா என அழைத்தாயா? என்று. ஆனால் அந்த வீரர் தான் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறிவிட்டார். பகுதிநேரப் பந்துவீச்சாளர் என்றுதான் கூறினேன் என்றார். எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். எனினும் அந்தப் போட்டியில் நான் கோபமாகவே இருந்தேன். 3-2 என ஆஷஸ் தொடரை நாங்கள் வென்றபிறகும் அந்த வீரரிடம் இதுகுறித்துக் கேட்டேன். அப்போதும் அதை மறுத்தவர், தனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருப்பதாகக் கூறினார் என்று தான் சந்தித்த இனப்பாகுபாடு சம்பவம் குறித்து தன்னுடைய சுயசரிதையில் மொயீன் அலி எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

இங்கிலாந்தின் பிர்மிங்கமில் பிறந்த மொயீன் அலியின் தாய் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தந்தை, பாகிஸ்தானியர். தி டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்துக் கூறியதாவது:

நான் விளையாடிய அணிகளில் மிகவும் வெறுப்பது ஆஸ்திரேலிய அணியைத்தான். அவர்கள் பழைய எதிரி என்பதற்காகச் சொல்லவில்லை. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தாலும் மக்களையும் வீரர்களையும் அவமரியாதையாக நடத்துவதாலும்தான். நான் அவர்களிடம் தொடர்ந்து விளையாடும்போதுதான் அவர்களின் மோசமான நடத்தையை முழுவதுமாக உணர்ந்தேன்.

2015 ஆஷஸ் தொடரில் இன்னும் மோசமாக நடந்துகொண்டார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் நல்லவிதமாகப் பழகுவார்கள். ஓர் அணி சிரமங்களை மேற்கொள்ளும்போது அவர்கள் மீது பரிதாபம் ஏற்படும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தின்போது ஆஸ்திரேலிய அணி மீது பரிதாபமே ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments