யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகல்: சானியா மிர்சா வேதனை
என்னுடைய சில ஓய்வுத் திட்டங்களை இது மாற்றும். இதுகுறித்த விவரங்களை நான் தெரிவிப்பேன் என்றார்.
யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. கடந்த வருடம் செப்டம்பரில் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார்.
இந்த வருடத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார் சானியா மிர்சா. இதுவே எனது கடைசிப் பருவம் என முடிவெடுத்துள்ளேன். ஒவ்வொரு வாரமாகக் கடந்து வருகிறேன். முழுப் பருவமும் விளையாடுவேனா எனத் தெரியாது. ஆனால் விளையாட நினைக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. என் மகனுக்கு மூன்று வயது. இந்த வயதில் அவனை என்னுடன் அழைத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் செல்கிறேன். இதை நான் மனத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய உடல் சோர்வடைந்து வருகிறது. வயது அதிகமாவதால் காயமானால் உடனடியாக அதிலிருந்து குணமாக முடிவதில்லை என்று கடந்த ஜனவரி மாதம் பேட்டியளித்தார் சானியா மிர்சா. இதனால் இந்த வருட இறுதியில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் சொல்லவிருப்பது நல்ல செய்தியல்ல. கனடாவில் இரு வாரங்களுக்கு முன்பு விளையாடியபோது என்னுடைய முன்னங்கை, முழங்கையில் காயம் ஏற்பட்டது. தற்போது ஸ்கேன் எடுத்துப் பார்க்கும்வரை இது எந்தளவுக்கு மோசமாகும் என அப்போது நான் அறியவில்லை. சில வாரங்கள் விளையாட முடியாத சூழலில் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். இது சரியல்ல. தவறான சமயத்தில் நிகழ்ந்துள்ளது. என்னுடைய சில ஓய்வுத் திட்டங்களை இது மாற்றும். இதுகுறித்த விவரங்களை நான் தெரிவிப்பேன் என்றார்.
2022 யு.எஸ். ஓபன் போட்டி, ஆகஸ்ட் 29-ல் தொடங்கி செப்டம்பர் 11 அன்று நிறைவுபெறுகிறது.