இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமனம்!
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகத் தென்னாப்பிரிக்காவின் கிரைக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகத் தென்னாப்பிரிக்காவின் கிரைக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்திய ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா காலிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. நியூசிலாந்துக்கான எதிரான ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் தோற்றது. இதையடுத்து 9-வது இடத்தை அடைந்தது இந்திய அணி.
ஒடிஷாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி முடிவடைந்ததையடுத்து இந்திய அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார் பயிற்சியாளர் கிரஹாம் ரீட். அணியின் இதர பயிற்சியாளர் கிரேக் கிளார்க், ஆலோசகர் மிட்செல் டேவிட் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தார்கள். டோக்கியா ஒலிம்பிக்ஸில் இந்திய அணி வெண்கலம் வென்றது கிரஹாம் ரீடின் முக்கியமான சாதனையாகும். 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது. இதையடுத்து 2022 காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிரைக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கி அறிவித்துள்ளார்.
48 வயது ஃபுல்டன், 25 வருடங்களாகப் பயிற்சியாளர் பணியில் அனுபவம் பெற்றவர். அயர்லாந்து அணியின் பயிற்சியாளராக 2014 முதல் 2018 வரை ஃபுல்டன் பணியாற்றியபோது அந்த அணி கடந்த 100 வருடங்களில் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்தது. இதனால் 2015-ல் எஃப்.ஐ.எச். சிறந்த பயிற்சியாளர் விருதை அவர் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பெல்ஜியம் அணி தங்கம் வென்றபோது அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக ஃபுல்டன் பணியாற்றியுள்ளார். அதேபோல 2018-ல் பெல்ஜியம் அணி உலகக் கோப்பையை வென்றபோதும் பயிற்சியாளர் குழுவில் ஃபுல்டன் இடம்பெற்றிருந்தார். ஒரு வீரராக தென்னாப்பிரிக்க அணிக்காக 195 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.