ஜியோஸ்டார் விளையாட்டு துறை தலைமைச் செயல் அதிகாரி இஷான் சட்டர்ஜீ, “அடுத்த 5-10 ஆண்டுகள் இந்திய விளையாட்டுகளின் பொருளாதாரத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் காலமாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.
கடந்த ஐபிஎல் போட்டிகளின்போது 100 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
2025 ஐபிஎல் சீசனில் ஜியோ ஹாட்ஸ்டார் 280 பில்லியன் சப்ஸ்கிரைபர்களை நெருங்கி சாதனை படைத்தது.
பலவிதமான புது புது தொழில்நுட்பங்களை ஐபிஎல் ரசிகர்கள் ரசித்து பார்த்தார்கள்.
இந்திய விளையாட்டு பொருளாதாரத்தின் முக்கியமான காலகட்டம்
மும்பையில் நடந்த எஃப்ஐசிசிஐ பிரேம்ஸ் நிகழ்வில் நடைபெற்ற உரையாடலில் பேசிய ஜியோ ஸ்டார் நிறுவனத்தின் விளையாட்டு துறை சிஇஓ இஷான் சட்டர்ஜீ பேசியதாவது:
இந்தியாவின் விளையாட்டு, மீடியா பரிணாமம் புதிய கட்டத்தை நோக்கி செல்கிறது. இதில் ரசிகர்கள், தொழில்நுட்பம் உள்ளடங்கிய மிகப்பெரிய எழுச்சி உருவாகியுள்ளது.
கிரிக்கெட் மட்டும் முக்கியமல்ல...
ஆடவர் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும், உண்மையான வளர்ச்சி என்பது மற்ற விளையாட்டுகளின் எழுச்சியில்தான் இருக்கிறது.
இந்தியாவில் பிற விளையாட்டுகளின் எழுச்சிதான் நாங்கள் வைக்கும் பெரிய பந்தயம். டென்னிஸ், கால்பந்து, கபடி போன்ற பிரபலமான விளையாட்டுகளோ, அல்லது புதுமையான இ-ஸ்போர்ட்ஸ் என அனைத்திலும் மிக வேகமான வளர்ச்சி இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இது வெறும் நம்பிக்கை அல்ல; இந்திய வீரர்கள் உலகத் தரத்தில் விளையாடும் தருணம் வரும்போது, ரசிகர்கள் தாமாகவே அதிகரிக்கிறார்கள். நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலுக்காக செய்ததை பாருங்கள்.
திருப்புமுனையில் இந்தியா
டிலாய்ட் ஆய்வின்படி, இந்தியாவின் விளையாட்டு பொருளாதாரம் 2023 முதல் 2030 வரை 30 பில்லியன் டாலரில் இருந்து 70 பில்லியன் டாலராக உயரக்கூடும்.
பிரேசில் 6–8 பில்லியன் டாலரிலும் மிகவும் முன்னேற்றமான சந்தையான பிரிட்டனில் சுமார் 40 பில்லியன் டாலரிலும் உள்ளது. இந்தியா உண்மையிலேயே ஒரு திருப்புமுனையில் உள்ளது.
பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் நாம் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒளிபரப்பாளர்களாகிய நாங்கள் பெண்கள் கிரிக்கெட்டிற்கு காட்சிப்படுத்தல், முக்கிய நேர ஸ்லாட்கள், சரியான கதை சொல்லல் ஆகியவற்றை வழங்க வேண்டும். இது அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிக்க உதவும். டபிள்யூபிஎல் எங்களின் மிக முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
புதிய அனுபவம் தரும் ஜியோஸ்டார்
இந்தியா எப்போதும் தொழில்நுட்ப ஏற்றுக்கொள்ளலில் முன்னணியில் உள்ளது. ஜியோஸ்டாரில் நாங்கள் நுகர்வோர் நடத்தையால் வழிநடத்தப்படுகிறோம். விளையாட்டு பார்வையின் எங்கள் நோக்கம் தனிப்பட்ட, ஒருவருக்கொருவர் மாறுபட்ட அனுபவமாகும்.
ஒரே போட்டியை இரண்டு பேர் பார்த்தாலும், அவர்களின் அனுபவம், கேமரா கோணங்கள், விளக்கம் மற்றும் பார்க்கும் அம்சங்கள் அனைத்தும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
இந்தியாவின் வேகமான தொழில்நுட்ப ஏற்றுக்கொள்ளல் விளையாட்டு அனுபவத்தை மறுவமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பல-காமிரா பார்வை, செங்குத்து வடிவங்கள் மற்றும் ஏஐ அடிப்படையிலான ஸ்மார்ட் ஹைலைட்ஸ் போன்ற புதுமைகள் ரசிகர்களின் பழக்கத்தை மாற்றி வருவதாகவும் இது தொடக்கம் மட்டுமே எனவும் அவர் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.