உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா வீரர்கள் மோதல்: ஃபிஃபா விசாரணை!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஃபிஃபா விசாரணை நடத்துகிறது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய பின்னர் ஸ்பெயின் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது, இரு அணி வீரர்களும் மைதானத்தில் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஃபிஃபா நேற்று (ஜூலை 20) விசாரணை நடத்தியது.
விடியோ காட்சிகளில் ஆர்ஜென்டீனா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ் உள்பட பல வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய லியாண்ட்ரோ , ஸ்பெயின் மாற்று வீரர் கேவி தலையிட்டபோது அவரையும் கீழே தள்ளினார்.
Advertisement
Advertisement
வெற்றியைக் கொண்டாட ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி மைதானத்தினுள் ஓடுகையில், ஆர்ஜென்டீனாவின் தடுப்பாட்ட வீரர் நஹூயல் மொலினா அவரது வயிற்றில் அடித்ததும் விடியோவில் பதிவானது. மொலினா பின்னர் ரோட்ரியிடம் சண்டையிட்டார். அப்போது, ரோட்ரி தனது முன்னாள் மான்செஸ்டர் சிட்டி அணி வீரரான ஆர்ஜென்டீனாவின் நிக்கோலஸ் ஒட்டமெண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி மற்றும் பிற வீரர்கள் நிலைமையைச் சமாதானப்படுத்த ஓடி வந்தனர்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஃபிஃபா, “போட்டிக்குப் பின் நடைபெற்றச் சம்பவங்கள் தொடர்பான (ஃபிஃபா ஒழுங்குமுறை விதிகள்) விதிமீறல்களை விசாரிக்க வழக்கறிஞர் மற்றும் ஒழுங்குமுறைக் குழு ஒன்றை நியமித்துள்ளது.
விசாரணைக்கான கால அவகாசம் பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஆட்டத்திற்குப் பின் ஆர்ஜென்டீனா வீரர் பரேடஸுக்கு நேரடியாகச் சிவப்பு அட்டை காட்டப்படவில்லை என்பதால், அந்த அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனா அணி 10 வீரர்களாகக் குறைக்கப்பட்ட பின், ஸ்பெயின் கூடுதல் நேரத்தில் 1 கோல் அடித்து ஜெயித்தது. என்சோ பெர்னாண்டஸ் ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஸ்பெயின் அணி கோப்பையை உயர்த்தியபோது, ஆர்ஜென்டீனா வீரர்கள் ரசிகர்களைப் பார்த்தவாறு, மேடைக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருந்தனர். எதிரணி பதக்கங்களைப் பெறுகையில் மரியாதை அணிவகுப்பு அளித்த சாம்பியனான ஸ்பெயின் அணிக்கு இது அவமரியாதை செய்வதைப் போன்று இருந்தது.
FIFA is conducting an investigation into the clash that took place during the World Cup final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.