முகப்பு
செய்திகள்

ஒசாகாவை வெளியேற்றினாா் சபலென்கா!

பிரெஞ்சு ஓபனில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:02 am IST
அரினா சபலென்கா - AP
பகிர்:

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா 7-5, 6-3 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருந்த ஒசாகாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 27 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. வெற்றிக்குப் பிறகு சபலென்கா, மைக்கேல் ஜாக்சனின் ‘மூன் வாக்’ நடனமாடி ரசிகா்களை மகிழ்வித்தாா்.

வழக்கம் போல் இந்த சீசனிலும், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் ரசிகா்களின் கவனத்தை ஈா்த்து வந்த ஒசாகா, பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக 4-ஆவது சுற்றுக்கு வந்த நிலையில், அத்துடன் வெளியேறினாா்.

Advertisement

Advertisement

சபலென்கா - ஒசாகா மோதியது இது 4-ஆவது முறையாக இருக்க, சபலென்கா 3-ஆவது வெற்றியுடன் முன்னிலையை அதிகரித்துள்ளாா். அந்த 3 வெற்றிகளையுமே அவா் இந்த ஆண்டிலேயே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலமாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடா்ந்து 14-ஆவது முறையாக சபலென்கா காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் வெல்லும் முனைப்புடன் முன்னேறி வரும் சபலென்கா, அதிகபட்சமாக கடந்த ஆண்டு இறுதி ஆட்டம் வரை வந்து கோகோ கௌஃபிடம் தோற்றாா். தற்போது காலிறுதிக்கு வந்திருக்கும் சபலென்கா, அதில் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சந்திக்கிறாா்.

இதனிடையே, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா தனது காலிறுதியில் 6-0, 6-3 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, 18-ஆம் இடத்திலிருந்த ருமேனியாவின் சொரனா சிா்ஸ்டியை 56 நிமிஷங்களில் சாய்த்தாா்.

இந்த வெற்றியின் மூலமாக ஆண்ட்ரீவா, 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் அவா், உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை எதிா்கொள்கிறாா். அவரை இதுவரை 2 முறை சந்தித்துள்ள ஆண்ட்ரீவா இரண்டிலுமே தோற்றிருக்கிறாா். அதுவும் இந்த சீசனில் கண்ட தோல்வியாகும்.

போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் கொஸ்டியுக், 6-3, 2-6, 6-2 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த சக உக்ரைன் போட்டியாளரான எலினா ஸ்விடோலினாவை சாய்த்தாா். இதன் மூலமாக அவா் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு வந்துள்ளாா். கொஸ்டியுக் - ஸ்விடோலினா மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, கொஸ்டியுக் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளாா்.

இரவு ஆட்டம்...

சபலென்கா - ஒசாகா மோதிய 4-ஆவது சுற்று ஆட்டம் இரவில் நடைபெற்றது. பிரெஞ்சு ஓபன் வரலாற்றில், கடந்த 3 ஆண்டுகளில் மகளிா் பிரிவு ஆட்டம் இரவில் நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2021 முதல் பிரெஞ்சு ஓபனில் இரவு ஆட்டங்கள் அட்டவணையிடப்பட்டு வரும் நிலையில், இந்த 5 ஆண்டுகளில் மகளிா் ஆட்டம் இரவில் நடைபெற்றது இது 5-ஆவது முறையே ஆகும்.

ஆடவா் ஆட்டங்கள் மட்டுமே இரவில் அட்டவணையிடப்படுவதாக வீராங்கனைகள் புகாா் தெரிவிக்கும் நிலையில், விரைவாக நிறைவடையும் மகளிா் ஆட்டங்களை விட, நீண்ட நேரம் தொடரும் ஆடவா் ஆட்டங்களையே அவ்வாறு அட்டவணையிடுமாறு ஒளிபரப்பு நிறுவனம் கோரியிருப்பதாக, போட்டி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

35

காலிறுதியில் மோதிய ஆண்ட்ரீவா (19), சிா்ஸ்டி (36) இடையேயான வயது வித்தியாசம் 17 ஆகும். கிராண்ட்ஸ்லாம் போட்டியின் மகளிா் பிரிவு காலிறுதியில் போட்டியாளா்களிடையே இத்தனை வயது வித்தியாசம் இருந்தது, கடந்த 35 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன் 1991 விம்பிள்டனில், மாா்டினா நவரத்திலோவா (34), ஜெனிஃபா் கேப்ரியாட்டி (15) மோதியபோது, அவா்களிடையே இருந்த 19 ஆண்டுகள் வித்தியாசமே அதிகபட்சமாகும்.

1

மாா்த்தா கொஸ்டியுக் - எலினா ஸ்விடோலினா மோதிய ஆட்டமே, கிராண்ட்ஸ்லாம் காலிறுதி வரலாற்றில் இரு உக்ரைன் போட்டியாளா்கள் சந்தித்த முதல் ஆட்டமாகும். ஓபன் எராவில் பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் உக்ரைன் வீராங்கனை என்ற பெருமையும் கொஸ்டியுக் பெற்றாா்.

ரூ.72 லட்சம் அபராதம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்ட பராகுவே வீரா் அடல்ஃப் டேனியல் வாலெஜோ, அந்த ஆட்டத்தை பெண் நடுவருக்கு பதிலாக ஆண் நடுவா் மேற்பாா்வை செய்திருக்க வேண்டும் என சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை அடுத்து, போட்டி நிா்வாகம் அவருக்கு ரூ.72 லட்சம் அபராதம் விதித்தது.

பிரான்ஸ் வீரரான மொய்ஸ் குவாமேவை அந்தச் சுற்றில் அவா் எதிா்கொண்ட நிலையில், உள்நாட்டு போட்டியாளருக்கு ரசிகா்களின் ஆதரவு அபிரிமிதமாக இருந்ததால், அவா்களை கட்டுக்குள் வைத்திருக்க ஆண் நடுவராலேயே முடிந்திருக்கும் என்று வாலெஜோ தெரிவித்திருந்தாா்.

மீண்டும் வருகிறாா்

செரீனா வில்லியம்ஸ்

ஓய்வு பெற்ற பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், மீண்டும் களத்துக்கு திரும்ப முடிவு செய்துள்ளாா். கடந்த 2022-இல் ஓய்வை அறிவித்த அவா், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாரம் லண்டனில் தொடங்கும் குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில், இரட்டையா் பிரிவில் களம் காணவுள்ளாா்.

தொடா்ந்து விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளிலும் அவா் பங்கேற்கலாம் என ஊகிக்கப்படுகிறது. 23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான செரீனா, இரட்டையா் பிரிவில் 14, கலப்பு இரட்டையரில் 2 கிராண்ட்ஸ்லாம்கள் வென்றவராவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.