எபோலா அச்சம்: காங்கோவின் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஸ்பெயின்!
காங்கோ கால்பந்து அணியின் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து...
ஸ்பெயினில் லா லினியா டி லா கான்செப்சியன் பகுதியில் நடைபெற இருந்த காங்கோ அணியின் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீலேவுக்கு எதிராக ஸ்பெயினில் விளையாடவிருந்த காங்கோ அணியின் இந்தப் போட்டி எபோலா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11ல் தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
காங்கோ அணி உலகக் கோப்பையில் குரூப் கே பிரிவில் பங்கேற்கவிருக்கிறது. இதில் முதல் போட்டியில் போர்ச்சுகலுடன் ஜூன்17ஆம் தேதியும் கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் முறையே ஜூன் 23, 27ஆம் தேதிகளில் விளையாடவிருக்கிறது.
காங்கோ கால்பந்து அணி ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எபோலா வைரஸ் காங்கோ, உகாண்டாவில் தீவிரமாக பரவி வருவதால் பலரும் அச்சத்தில் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனமும் இது குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தக் காரணங்களால் காங்கோ அணி தனது மூன்று நாள் உலகக் கோப்பைக்கான பயிற்சிகளை ரத்து செய்திருக்கிறது.
காங்கோ வீரர்கள் பெரும்பாலும் பிரான்ஸ் நாட்டின் கிளப்பில் விளையாடுவதால் அவர்களுக்கு எபோலா குறித்த தாக்கம் இருக்காதெனக் கூறப்படுகிறது. ஃபிஃபா இது குறித்து காங்கோ கால்பந்து அமைப்புடன் தொடர்ச்சியான உரையாடலும் மருத்துவ, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின் தொடரவும் அதைக் கண்காணித்தும் வருகிறது.
காங்கோ அணி 1974க்குப் பிறகு முதல்முறையாக உலகக் கோப்பக்குத் தேர்வாகியுள்ளது.