ஓமர் அர்டனின் உலகக் கோப்பை கனவு தாமதம் ஆகலாம்; தோற்கடிக்க முடியாது: சோமாலிய பிரதமர்
அமெரிக்காவில் தனது நாட்டின் நடுவர் ஓமர் அர்டனை அனுமதிக்க மறுத்தது குறித்து சோமாலிய பிரதமர் கூறியிருப்பதாவது...
கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க தனது நாட்டின் நடுவர் ஓமர் அர்டனை அமெரிக்கா அனுமதிக்க மறுத்தது குறித்து சோமாலிய பிரதமர், “கனவு தாமதம் ஆகியுள்ளதுதானே தவிர, அதனைத் தோற்கடிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் நடுவராச் செயல்பட இருந்த சோமாலிய நாட்டைச் சேர்ந்த ஓமர் அர்டன் (34 வயது) தங்கள் நாட்டில் நுழைய அமெரிக்கா அனுமதி மறுக்கவே, போட்டிக்கான நடுவா் பட்டியலில் இருந்து ஃபிஃபாவும் அவரது பெயரை நீக்கியது சர்ச்சையாகியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் பணியாற்றும் முதல் சோமாலிய நடுவராக சாதனை படைக்க இருந்தார் ஓமர் அர்டன். ஆப்பிரிக்க கண்டத்தில் சிறந்த கால்பந்து நடுவராக 2025-இல் தேர்வான அவர் 2 மாதங்களுக்கு முன்பே ஃபிஃபா வெளியிட்ட உலகக் கோப்பை போட்டிக்கான நடுவர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
Advertisement
Advertisement
போட்டிக்காக கடந்த வாரம் நுழைவு இசைவை பெற்ற அவா், கடந்த சனிக்கிழமை அமெரிக்கா வந்தபோது மியாமி விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உரிய காரணத்தை, அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கவில்லை. எனினும், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறுவதை தவிர்ப்பதற்காக டிரம்ப் நிா்வாகம் பயண கட்டுப்பாடுகள் விதித்த சில நாடுகளில் சோமாலியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமர் அர்டனுக்கு சோமாலியாவில் மிகுந்த வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், சோமாலிய நாட்டின் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நான் நமது சோமாலிய நடுவர் ஓமர் அர்டனிடம் உங்களது உலகக் கோப்பைக் கனவு தாமதம்தான் ஆகியுள்ளதே தவிர அதன் மதிப்பை குறைத்துவிட முடியாது. எப்போதோ அவர் உதைத்த பந்தினால், அவர் பல லட்சக்கணக்கான மனங்களை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
ஓமர் அர்டன் கால்பந்து உலகத்தை இணைத்தது மட்டுமல்லாமல், கனவு கானும் ஒவ்வொரு குழந்தையிடமும் நம்பிக்கையை தீப்பற்றச் செய்திருக்கிறார். கனவு ஒத்திவைக்கப்படலாம், ஆனால் அவைகளை தோற்கடிக்க முடியாது.
பல ஆண்டுகளாக இவரது திறமை, நேர்மை, அர்ப்பணிப்பை நம்பிய சிஏஎஃப், ஃபிஃபாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்நாள் முழுவதும் ஓமர் விசில் ஊதுவது என்பது அதிகாரத்தின் சின்னமாக இல்லாமல் நேர்மை, நீதி, விளையாட்டு உணர்வுக்கு சான்றாக அமையும். தன்னை கால்பந்துக்கு ஒப்புவித்த ஓமருக்கு விதி தடையாக அமைந்துள்ளது.
இன்று, ரோல் மாடலான ஓமர் அர்டனை கௌரவிக்க வாய்ப்பு கிடைத்தது. போட்டியில் பங்கேற்பதால் மட்டுமல்ல, தனது வாழ்வை வைத்தே உண்மையான மகத்துவம் மதிப்பிடப்படுகிறது என்பதற்கு நேரடி உதாரணம் அவர். கடினமான சூழ்நிலையிலும் நேர்மையைக் கடைபிடிக்கும் ஓமரின் வாழ்க்கை நமக்கு ஆழமான லெகசியை நினைவூட்டுகிறது என்றார்.